“எனக்கென்ன குடும்பமா? குட்டியா? பிரம்மச்சாரி வாழ்க்கைதான்..” எனச் சொல்லி வருபவர், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. ஆனாலும், தனது சொந்த அக்காவின் பேரன் ரஜித்பாலாஜியை, ஆன்மிக வாரிசாக உருவாக்கி வருகிறார்.
மீண்டும் விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆனதற்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டியும், ஊர் ஊராக, மாநிலம் விட்டு மாநிலம்கூட, கோவில் கோவிலாகச் சென்று வருகிறார், ராஜேந்திரபாலாஜி.
தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில், கேரளாவில் குருவாயூரப்பன் கோவில் மற்றும் சோட்டாணிக்கரை பகவதி அம்மன்கோவில் என பக்திமானாக வலம் வருகிறார். சிறுவன் ரஜித் பாலாஜியும் அமைச்சருடன் பயணிக்கிறான். ‘ஏழை, பணக்காரன் எல்லாருக்கும் வயிறு ஒன்றுதான்!’ எனச் சிந்தாந்தம் பேசுகின்ற ராஜேந்திர பாலாஜி, அரசியலில் தன்னுடைய வாரிசென்று, உறவினர் யாரையும் வலிய திணித்ததில்லை. ஆனாலும், சிறுவன் ரஜித்பாலாஜி மீது பாசமோ பாசம்! வெளியூரிலிருந்து திருத்தங்கல்லில் உள்ள தன் வீட்டிற்கு நள்ளிரவு கடந்து வந்தாலும்கூட, மாமாவுக்காக விழித்திருப்பான் ரஜித்பாலாஜி. மாத்திரை, பால் என வேண்டியதைத் தந்து, ராஜேந்திரபாலாஜி தூங்கும் வரை அருகிலேயே இருப்பான்.
பட்டன் ஃபோன் மட்டுமே வைத்திருந்த ராஜேந்திர பாலாஜியை, ‘ஆன்ட்ராய்டு’ பக்கம் இழுத்து வந்ததே இச்சிறுவன்தான்! 'ஆன்மிகச் செம்மல்' என்று கட்சியினரால் அழைக்கப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜியின் ஆன்மிக வாரிசாகக் கருதப்படுகிறான், ரஜித்பாலாஜி!