Skip to main content

முதல்வர் சொன்னார்; முகர்ந்து பார்த்தார்! -கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டிய கரோனா வேகம்!

Published on 10/08/2020 | Edited on 10/08/2020
ADMK MINISTER RAJENDRABALAJI

 

சில விஷயங்களை உள்ளூரில் இருப்பவர்களே தெரிந்திருக்க மாட்டார்கள். ஆனால்,  எங்கோ இருப்பவர் அதை அறிந்திருப்பார். அதன் அருமையை உணர்ந்திருப்பார். அப்படி ஒரு ஊராகத்தான் இருக்கிறது, ராஜபாளையம். அங்கே அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனம் எடுத்து வரும் முயற்சியை அறிந்தவராக இருக்கிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
 

தென் மாவட்ட கரோனா தடுப்பு ஆய்வுக்காக திருநெல்வேலி வந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் மதிய உணவு சாப்பிட்டபோது, “என்ன பாலாஜி.. உங்க மாவட்டத்துல.. அதான் ராஜபாளையத்துல இருக்கிற அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்துல.. கரோனா வர்றத தடுக்கிறதுக்கான சித்த மூலிகைகள் அடங்கிய மருந்துப் பெட்டகம் தயார் பண்ணுறதா கேள்விப்பட்டேன். நீங்க நேர்ல போயி பார்த்துட்டு எனக்கு தகவல் சொன்னா நல்லாயிருக்கும்.” என்று கூற, மறுநாளே ராஜபாளையம் சென்று,  அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தில் ஆஜராகிவிட்டார் ராஜேந்திரபாலாஜி.  



அங்கிருந்த நிர்வாகிகள், ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேத, யுனானி, சித்தா, ஹோமியோ போன்ற மருத்துவ முறைகளின் அடிப்படையில் தாங்கள் தயாரித்த மருந்துப் பெட்டகங்களை, ராஜேந்திரபாலாஜியிடம் காட்சிப்படுத்தி, அந்த மருந்துகள் குறித்து விளக்கமும் அளித்துள்ளனர். மேலும், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கஷாயத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் அருந்தி வந்தாலே, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துவிடும் எனக்கூறி, கரோனாவை தடுக்கும் ஆற்றல் மிக்க மூலிகைகளையும் காண்பித்துள்ளனர். எந்த ஒரு நோயையும் வருவதற்கு முன்பே தடுத்து, உடலை ஆரோக்கியமாகப் பேணுவதற்கு, இதுபோன்ற மூலிகைத் தயாரிப்புகள், மனிதகுலத்துக்கு பெரிதும் துணை நிற்கின்றன என்று சிலாகித்துள்ளனர்.  

 

ADMK MINISTER RAJENDRABALAJI


கரோனா தடுப்புக்கான ஹோமியோ சொட்டு மருந்தை அளித்ததோடு, கரோனா காப்பு எனப்படும் கிராம்பு, வசம்பு உள்ளிட்ட 18 வகை மூலிகை துகள்கள் கட்டப்பட்ட மஞ்சள் துணியை, அமைச்சரின் கையில் கட்டிவிட்டனர். ராஜேந்திரபாலாஜியும் அவருடன் சென்றவர்களும், கரோனா காப்பை ஒரே நேரத்தில் முகர்ந்து பார்த்து பரவசம் அடைந்திருக்கின்றனர்.  



ரூ.500-லிருந்து ரூ.1000 வரை விலை மதிப்புள்ள அந்த கரோனா தடுப்பு மருந்துப் பெட்டகங்களை வாங்கிய ராஜேந்திரபாலாஜி, அவற்றை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு கொடுப்பதற்காக சென்னை சென்றுள்ளார் எனத் தகவல் கிடைக்க, நாம் அரவிந்த் ஹெர்பல்ஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டோம்.
 

அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவிலுள்ள பெண் ஊழியர்  ஒருவர் பேசினார்.  “அது பத்துவிதமான மூலிகைகள் அடங்கிய கிட். அமைச்சரிடம் எங்கள் நிறுவனம் தந்த கிட் இன்னும் மார்க்கெட்டுக்கு கொண்டுவரவில்லை. விரைவிலேயே பொதுமக்களுக்கும் கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.” என்றார்.



உலகமே, கரோனாவை தடுப்பதற்கான மருந்தினைக் கண்டுபிடிப்பதற்கு தீவிரம் காட்டிவரும் நிலையில், தமிழகத்திலும் அதற்கான முயற்சியை, அரவிந்த் ஹெர்பல்ஸ் போன்ற நிறுவனங்கள் எடுத்துவருவது பாராட்டுக்குரியது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.