Skip to main content

யானையைக் கொடுமை செய்த அ.தி.மு.க. பிரமுகர்! 

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
ADMK Member covai midhun fined 1 lakh

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளாகும். இதனால், அப்பகுதிகளில் சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, காட்டுமாடு, மான், வரையாடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழ்கின்றன. பொதுவாக வனவிலங்குகள் இரவு நேரங்களில் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும், வனத்தினுள்ளும் சுற்றித் திரியும். இதன் காரணமாக வனப்பகுதி ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை மூலம் எப்போதும் கவனமுடனும், வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறும் வாகனங்களை இயக்க எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். 

குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு பகுதி ஆறுகள் நிறைந்த பகுதி என்பதால் எப்போதுமே அங்கு செழுமையாகக் காணப்படும். மேலும், அந்தப் பகுதி பல்வேறு அரியவகை மரங்களும், மருத்துவக் குணம் கொண்ட அரியவகை செடிகளும் கொண்டுள்ள பகுதியாகும். ஆழியாற்றை சுற்றியுள்ள பல சிறிய நீரோடைகளும், இறுதியாக ஆழியாற்றை வந்து அடைகின்றன. இதனால் ஆழியாற்றில் இருந்து மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க ஆழியாறு, நவமலை எனும் பகுதியில் இருந்து ஆரம்பமாகிறது. இந்த நவமலை கோட்டூர் - மலையாண்டிப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. 

ADMK Member covai midhun fined 1 lakh

அடர் வனப்பகுதி என்பதால் இந்த வழியாக வாகனங்கள் செல்ல, காலை 6 மணி முதல் மாலை 6 வரை அனுமதித்து வனத்துறை கட்டுப்பாடு வித்தித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  மேலும், அந்தப் பகுதியில் வாழும் பழங்குடி இன மக்களைத் தவிர்த்து வெளி ஆட்கள் செல்ல எக்காரணம் கொண்டு அனுமதி கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், கோட்டூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மிதுன் என்பவர் தனது காரில் நவமலை வனப்பகுதி சாலையில் சென்றுள்ளார். அப்போது அவரது வாகனத்திற்கு முன்னால் ஒரு காட்டு யானை வந்துள்ளது. இவர் யானைக்கு வழிவிட்டு அமைதியாக நிற்காமல், தனது வாகனத்தில் இருந்த அதீத ஒளி கொண்ட முகப்பு விளக்கை ஒளிரவிட்டு யானையின் கண்களை கூசச் செய்து அங்கிருந்து விரட்டியுள்ளார். இப்படியாக சில தூரம் வரை அந்தக் காட்டு யானையை விரட்டியபடி சென்றுள்ளார் அ.தி.மு.க. பிரமுகர் மிதுன். பிறகு யானை பதட்டத்தில் பயந்தபடி காட்டுக்குள் சென்றபிறகு இவரும் அந்தச் சாலையில் தொடர்ந்து பயணித்துள்ளார். இந்தக் காட்சிகள் அவரது வாகனத்தின் உள்ளிருந்தே வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ADMK Member covai midhun fined 1 lakh

வீடியோ வெளியாகி யானை கொடுமை செய்யப்பட்டிருப்பது வெளியே தெரியவந்தபிறகு மிதுனுக்கு சமூகவலைத்தளங்களிலும், வன உயிர் ஆர்வலர்களும் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்துவந்தனர். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வனத்துறை அ.தி.மு.க. பிரமுகர் மிதுனுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் வித்தித்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.