Skip to main content

"திருமாவும், நாங்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்துள்ளோம்"- கே.பாலகிருஷ்ணன் பேச்சு!

Published on 21/10/2021 | Edited on 21/10/2021

 

"You and I have given a voice to the oppressed people" - K. Balakrishnan speech!

 

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் பிறந்த நாள் விழா, 'சமூக நீதி சமூகங்களின் ஒற்றுமை' என்ற பெயரில் இசை அரங்கம், வாழ்த்தரங்கம் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பால.அறவாழி தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பேசுகையில், "இங்கு பேசிய வேல்முருகனின் பேச்சை பல இடங்களில் கேட்டுள்ளேன். அவர் அரசியல் வாழ்க்கை தொடங்கி பல கட்டங்களாகப் படிப்படியாக முன்னேறி தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ளார். அவருக்குள்ளே ஏற்பட்டுள்ள பரிமாண வளர்ச்சியைக் கண்டு உண்மையாகவே பெருமைப்படுகிறேன்.

 

ஏனென்று சொன்னால், எந்த இரண்டு சமுதாயங்கள் மற்றும் சமூகங்களும் ஒன்றிணையக் கூடாது என்ற  இயக்கத்தில் பிறப்பெடுத்து, அந்த இரண்டு சமுதாயங்களும் இணைய வேண்டுமென இரண்டு கைகோர்த்து சகோதரர்களாகப் பணியாற்ற வேண்டும் எனப் பேசுகிற அளவிற்கு, அவர் உயர்ந்திருக்கிறார்கள் என்றால் அப்படிப்பட்ட மாற்றங்கள் வேறு சிலருக்கு இல்லையே என்பதுதான் நமக்கு வருத்தமாக இருக்கிறது.

 

இங்கு சகோதரர் திருமாவளவன் வேறு நாங்கள் வேறு என்று இருந்தால் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கலாம். நாங்கள் ரெண்டு பேரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற காரணத்தினால் நாங்களே ஒருவருக்கொருவர் பாராட்டி பேசுவதற்கு அவசியம் இல்லை என கருதுகிறேன். இந்த மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக திருமாவும், நாங்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்துள்ளோம். மாவட்ட வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும். 

 

அடித்தட்டு மக்கள் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் போது ஆபத்தில் இருந்து காப்பவர்களாக, கேடயமாக திகழ்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினரும், விடுதலை சிறுத்தைகளும், இணைந்து மகத்தான பணியை மேற்கொண்டிருக்கிறோம். கடந்த நாடளுமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மட்டுமல்லாத மேடையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து போராடியதால்தான் பிஜேபி தமிழ்நாட்டில் தலைகாட்டமுடியாத வகையில் செய்யப்பட்டது. தி.மு.க. தலைமையிலான அணி தான் சனாதன, மதவெறி பிடித்திருக்கிறக் கூட்டத்தை தமிழ்நாட்டில் இருந்து அகற்றும் காரியத்தை செய்து இருக்கிறோம். 

 

இந்திய சமூகம் சாதியாக, மதமாக பிரிந்து இருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களை அனைத்தும் தனியாருக்குத் தாரைவார்த்து விட்டனர். இனிமேல் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில்  ஆள் எடுப்பது இருக்காது. போராடி பெற்ற இட ஒதுக்கீடு கொள்கை எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பியவர், விவசாயிகள் 12 மாத காலமாக விவசாய நிலங்கள் கார்ப்பரேட் கைக்கு போய்விடக்கூடாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

 

அதானிக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 1000 கோடி வருமானம். ஒரு நொடிக்கு எவ்வளவு  என எண்ணிக் கொள்ள வேண்டும். இந்திய நாடு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமையாகியுள்ளது. திருமாவின் மாற்று அரசியல் பாதை ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உள்ளது" எனத் தெரிவித்தார். 

 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருமாவளவனை வாழ்த்திப் பேசினர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.