Skip to main content

"அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி"- துணை முதல்வர் ஓ.பி.எஸ். அறிவிப்பு!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

ADMK CM CANDIDATE CM PALANISAMY

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

 

அப்போது அ.தி.மு.க.வின் வழிகாட்டுதல் குழுவை முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி, "அ.தி.மு.க.வை வழி நடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் மோகன, கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

 

அதைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2021- ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வேட்பாளர் ஈ.பி.எஸ்.க்கு பொன்னாடை போர்த்தி, பூங்கொத்தும் வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார் ஓ.பி.எஸ். 

 

முதல்வர் வேட்பாளராக ஈ.பி.எஸ். அறிவிக்கப்பட்டத்தை அடுத்து சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். 

 

அ.தி.மு.க.வின் இன்றைய அறிவிப்பில் ஈ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். கோரிக்கை நிறைவேறியுள்ளது. அதன்படி, முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிறைவேறியுள்ளது. அதேபோல், அ.தி.மு.க.வை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும், என்ற கோரிக்கையும் நிறைவேறியுள்ளது.

 

தமிழகத்தில் இரு முக்கிய கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் முடிவாகியுள்ள நிலையில், 2021- ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

 

மேலும் முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்ததால் ஏற்பட்ட சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்