Skip to main content

“எடப்பாடி பழனிசாமி மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - ராஜ் கவுண்டர் பேட்டி!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் நல சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

 

வல்வில் ஓரி பற்றிய போலி வரலாற்று புத்தகத்தை வெளியிட்டது மட்டுமல்லாமல் மக்கள் வரிப்பணத்தைக் கூட்டு சதி செய்து ஏமாற்றியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட எடப்பாடி பழனிசாமி, நந்தர் ஆகிய இருவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரி கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜ் கவுண்டர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது அவர் கூறியதாவது, “இன்று நாங்கள் டிஜிபி அவர்களிடம் மனு கொடுத்திருக்கிறோம். காரணம் என்னவென்றால், கடையெழு வள்ளல்களில் ஒருவரான மாமன்னர் வல்வில் ஓரிக்கு நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை செம்மேட்டில் 06.09.1975 அன்று கலைஞர் சிலை அமைத்து திறந்துவைத்தார். அன்றுமுதல் ஆடி 17, ஆடி 18 ஆகிய தினங்களில் அரசு விழாவாக இன்றுவரை நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு அமைந்துள்ள சிலையில், வல்வில் ஓரி வேட்டுக்கவுண்டர் என்று புறநானூறு பாடலைக்கொண்டு கல்வெட்டு வைத்துள்ளதும் அனைவரும் அறிந்ததே.

 

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தான் சார்ந்த கொங்கு வேளாளர் சமுதாய ஓட்டு வங்கியைப் பெறுவதற்காக நந்தர் என்பவர் மூலம் தமிழ்நாட்டின் மூத்த பூர்வக்குடி மக்களான வேட்டுவக்கவுண்டர்களின் மாமன்னரை கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என பொய்யான வரலாற்றைக் கட்டுக்கதையாக எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தை 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாக தேர்வு செய்து, நந்தரின் ‘கொங்கு பெருமகன் வல்வில் ஓரி’ என்ற அந்நூலுக்கு ரூ. 30,000 பரிசுத் தொகையும் பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தைக் கூட்டு சதி செய்து வீணடித்துள்ளார்கள்.

 

மேலும், இந்தப் புத்தகமானது இதுவரையிலும் எங்கும் வெளியிடப்படவில்லை. ஓரிரு புத்தகங்கள் மட்டும் அச்சடித்துக்கொண்டு அவர்களது அரசியல் அதிகாரத்தில் நேரடியாக சிறந்த நூலுக்கான விருதானது 2015ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரே இல்லை. எனவே இந்தப் பொய்யான நூலை எழுதுவதற்கு தூண்டுதலாக இருந்த எடப்பாடி பழனிசாமி, நூலாசிரியர் நந்தர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.