Skip to main content

சைக்கிளில் வந்த தாய் வீட்டுப் பொங்கல் சீர்; 91 வயதிலும் மகளை மறக்காத தந்தை

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

91 year old woman carrying Pongal gift her daughter home bicycle

 

கடந்த சில வருடங்களாக தை திருநாளான பொங்கல் நேரத்தில் ஒரு வீடியோ சமூக வலைத்தளம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அது மட்டுமின்றி ஒரு தந்தை மகள் பாசத்தை அழகாக காட்சிப்படுத்தி இருந்தது அந்த வீடியோ. அந்த வீடியோதான் தொடர்ந்து பல வருடங்களாகப் பொங்கல் நேரத்தில் அதிகம் பார்க்கவும் பகிரவும் செய்யும் வீடியோவாக உள்ளது.

 

அப்படி என்ன வீடியோ அது?

 

91 வயது தந்தை தன் மகளுக்குத் தனது சைக்கிளில் மஞ்சள் கொத்து, பச்சரிசி, வெல்லம் என பொங்கல் பொருட்களும் தலையில் கரும்புக்கட்டும் வைத்துக்கொண்டு செல்லும் வீடியோதான் அது. இந்த 2023ம் அதேபோல தான் தனது பாச மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்த ஆண்டில் வரும் முதல் தை திருநாளுக்கு பொங்கல் பானை, அடுப்பு, மஞ்சள், காய்கறி, கரும்பு என அத்தனை பொருட்களையும் வாகனங்களில் ஏற்றிச் சென்று தலைவரிசை கொடுத்து வருகின்றனர். இந்த நாள் புதுப்பெண்ணுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

 

அதேபோல தான் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 91 வயது விவசாயி செல்லத்துரை தனது மகள் சுந்தரம்பாளை 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பம்பட்டியில் திருமணம் செய்து கொடுத்தார். பல வருடங்கள் குழந்தையில்லை என்ற ஏக்கமும் கவலையும் இருந்தது. 9 வருடங்களுக்கு முன்பு இரட்டைக் குழந்தை பிறந்து அனைவரையும் சந்தோசப்படுத்தியது.

 

அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் தனது மகளுக்குப் பொங்கல் சீர் கொடுப்பதை மறப்பதில்லை தந்தை செல்லத்துரை. இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மகள் வீட்டுக்கு சைக்கிளில் பொங்கல் சீர் கொண்டு போன வீடியோதான் வைரலானது. அதேபோல இன்று சனிக்கிழமை தனது மகளுக்கு சீர் கொடுக்க அனைத்துப் பொருட்களையும் வாங்கி சைக்கிளில் கட்டி தொங்கவிட்டவர் ஒரு கட்டுக் கரும்பை தூக்கித் தனது தலையில் வைத்துக் கொண்டு அசால்ட்டாக 17 கி. மீ சென்று மகளுக்கு பொங்கல் சீர் கொடுத்து திரும்பியுள்ளார்.

 

இது பற்றி செல்லத்துரை நம்மிடம், “என் மகளைத் திருமணம் செஞ்சு கொடுத்து 12 வருசம் குழந்தை இல்லை. அதுக்கப்பறம் இரட்டை குழந்தை பிறந்தது. பொங்கல் வரப் போகுதுன்னாலே என் மகளும் பேரக்குழந்தைகளும் ரொம்ப ஆவலோட காத்திருப்பாங்க. வழக்கம் போல சைக்கிள்ல எல்லாத்தையும் வச்சு, தலையில கரும்பு கட்டையும் வச்சுக்கிட்டு போய் சைக்கிளை நிறுத்தும்போது அவங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. நமக்கும் வருசம் முழுவதும் தோட்டத்தில் வேலை செஞ்சு கிடைக்கிற மகிழ்ச்சியைவிட இந்த ஒருநாள் சீர் கொடுக்க போய் வருவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். 91 வயதானாலும் உடம்பில் தெம்பிருக்கு சைக்கிள் ஓட்றேன்” என்றார்.

 

எத்தனை வசதிகள் இருந்தாலும் தாய் வீட்டு சீர் வரும்போது அத்தனை மகள்களும் மகிழ்ச்சியில் குழந்தைகளாக மாறித்தான் விடுகிறார்கள். தந்தை செல்லத்துரை கொண்டு வந்த சீரைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் கசிந்ததாம் மகள் சுந்தரம்பாளுக்கு...

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.