Skip to main content

7 தமிழர் விடுதலை தாமதம்: அறத்தின்படி ஆளுனர் விளக்கமளிக்க வேண்டும்! ராமதாஸ்

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
ramadoss



7 தமிழர் விடுதலையில் தாமதம் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமை ஆளுனருக்கு சட்டப்படி இல்லை என்றாலும் அறத்தின்படி உள்ளது. அந்தக் கடமையை தமிழக ஆளுனர் மதித்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 138 நாட்கள் ஆகியும், அவர்களின்  விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை. 7 தமிழர்கள் விடுதலை விவகாரம் குறித்து முடிவெடுப்பதில்  எந்த காரணமும் இல்லாமல் ஆளுனர் மாளிகை தாமதம் செய்வது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.
 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 9&ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. இந்த விஷயத்தில் முடிவெடுக்கத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தீர்மானத்துடன் இணைத்து  தமிழக அரசு அனுப்பியிருந்தது. இத்தனைக்குப் பிறகும் இவ்விஷயத்தில்   ஆளுனர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு இம்மியளவுக்குக் கூட நியாயமான காரணங்கள் இல்லை.
 

முதலாவதாக 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் இருந்த அனைத்து தடைகளையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதியன்று அளித்தத் தீர்ப்பில் தகர்த்த உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்ய தமிழக ஆளுனருக்கு அதிகாரம் உண்டு என்றும், அது தொடர்பான விண்ணப்பங்களை அரசியலமைப்புச் சட்டத்தின் 161&ஆவது பிரிவின் கீழ் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. அதன்படி தான் தமிழக அரசும் ஆளுனருக்கு பரிந்துரைத்தது.
 

இரண்டாவதாக, 7 தமிழர்கள் விடுதலை குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி விளக்கமளித்த ஆளுனர் மாளிகை,‘‘ 7 தமிழர்கள் விடுதலை குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தவில்லை. எனினும் இந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்பதால் தேவையான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அவற்றின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டப்படி நியாயமான, நேர்மையான முடிவுகள் எடுக்கப்படும்’’ என்று கூறியிருந்தது. 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருந்தும், இத்தகைய விளக்கமளித்து 132 நாட்களாகும் நிலையில், 7 தமிழர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுனரால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை என்பதை தமிழ்நாட்டு மக்களால் நம்ப முடியவில்லை.
 

மூன்றாவதாக, 7 தமிழர்கள் விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது ராஜிவ் கொலையின் போது உயிரிழந்தவர்கள் சிலரின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு தான். ஆனால், 7 தமிழர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி எந்த சலுகையும்  வழங்கப்படவில்லை என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதனால், 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான எதிர்ப்பும் செல்லாததாகி விட்டது. அதனால் ஆளுனர் உடனடியாக முடிவெடுத்து 7 தமிழர்களை விடுவித்திருக்கலாம். ஆனால், ஆளுனர் அவ்வாறு செய்யவில்லை.
 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகள் ஆகி விட்டன. அவர்களை  விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2000-ஆவது ஆண்டு முதலில் எழுப்பப்பட்டது. ஆனால், அப்போதிருந்த திமுக அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. அதன்பின் 2008-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நீதியரசர் கிருஷ்ணய்யர் கடிதம் எழுதினார். தமிழகத்தின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. ஆனால், அப்போதும் ஆட்சியிலிருந்த திமுக அக்கோரிக்கையை ஏற்கவில்லை. அண்ணா நூற்றாண்டு விழா கடந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு முடிந்தும் அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை என்பதைப் பார்க்கும் போது, தமிழர்கள் என்பது தான் அவர்கள் விடுதலைக்கு தடையோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
 

அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுனர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால்,  அவர்களை விடுதலை செய்ய ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், இந்த ஒரு காரணத்தை  வைத்துக் கொண்டு விடுதலையை ஆளுனர் தாமதிப்பது முறையல்ல. 7 தமிழர் விடுதலையில் தாமதம் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமை ஆளுனருக்கு சட்டப்படி இல்லை என்றாலும் அறத்தின்படி உள்ளது. அந்தக் கடமையை தமிழக ஆளுனர் மதித்து செயல்பட வேண்டும்.
 

அனைவருக்கும் பொதுவானவர்; நடுநிலையானவர் என்று தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளும் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அதை 7 தமிழர்கள் விடுதலை விஷயத்தில் மெய்ப்பிக்க வேண்டும். எனவே, இனியும் தாமதிக்காமல் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 'One teacher should be confirmed for the class' - Ramadoss' demand

'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி  இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது  ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர்  விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம்  கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது  ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி  தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட  மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.