சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பழைய மாமல்லபுரம் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர். இதன் மீதான தனிக்கை கடந்த 6ம் தேதி நடைபெற்றது. அப்போது, வாடிக்கையாளர் அடகு வைத்த நகைகளின் ரசீது மதிப்பும், நகை இருப்பு எடையிலும் வேறுபாடு காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்தனர். அப்போது 24 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் சிறு சிறு நகைகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
இது குறித்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், தனியார் நிறுவனத்தின் மூலம் கடந்த நான்கு வருடங்களாக வங்கியில் துப்புரவு பணி செய்துவரும் லூர்து மேரி (39) என்ற பெண் மீது போலீஸுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் நகைகளை சரிபார்த்து அதை கவரில் வைக்கும் பணியை செய்து வந்தேன். அப்போது கவரில் பல நகைகளைப் போடும்போது அதில் இருக்கும் சிறிய நகைகளை அவர் எடுத்தது தெரியவந்தது. இப்படி அவர் கடந்த நான்கு வருடங்களில் மொத்தம் 50 பவுன்களுக்கு மேல் நகைகளை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், திருடப்பட்ட நகைகளை அடகு கடை, தனியார் வங்கி உள்ளிட்ட இடங்களில் அடகு வைத்து லட்சக் கணக்கில் பணம் பெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிறகு அவர் சொன்ன தகவலின்படி அவர் அடகு வைத்த நகைகளை எல்லாம் போலீஸார் மீட்டனர். மேலும், லூர்து மேரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.