Skip to main content

டிரைவரின் புத்திசாலித்தனத்தால் மீட்கப்பட்ட 40 லட்சம் மதிப்புள்ள டேங்கர் லாரி!

Published on 25/08/2021 | Edited on 25/08/2021

 

40 lakh worth of oil and tanker truck recovered by driver's ingenuity

 

சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியிலிருந்து பெட்ரோலியம் கம்பெனியின் லாரி ஒன்று, 20 ஆயிரம் லிட்டர் (வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயில்) இன்ஜின் ஆயிலை நிரப்பிக்கொண்டு விழுப்புரம் அருகே கண்டமங்கலம் பகுதியில் உள்ள பள்ளிதென்னல் என்ற பகுதியில் இயங்கிவரும் தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்றது. அந்த ஆயிலைக் கொண்டு வருவதற்காக சென்னையிலிருந்து புறப்பட்ட லாரியை மதுரை பகுதியைச் சேர்ந்த விமல் காந்தன் என்பவர் ஓட்டிவந்தார். இதனையடுத்து, கண்டமங்கலம் அருகே உள்ள சம்பந்தப்பட்ட ஆயில் கம்பெனிக்கு அருகே லாரி வந்துகொண்டிருக்கும்போது, அங்கு திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் லாரியை வழிமறித்து நிறுத்தி, தான் ஒரு போலீஸ் என்று கூறி லாரியை சோதனையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

உண்மையான போலீஸ் என நம்பிய லாரி டிரைவர், டேங்கர் லாரியை நிறுத்தியுள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திகொண்ட அந்த மர்ம நபர், லாரி டிரைவரை  மிரட்டி அவரும் லாரியில் இருந்தபடியே டேங்கர் லாரியை கடத்திச் சென்றுள்ளார் மர்ம நபர். அப்போதுதான் இவர் உண்மையான போலீஸ் அல்ல என்பது டிரைவர் விமல் காந்தனுக்கு புரிந்தது. இந்நிலையில், அந்த லாரி மதகடிப்பட்டு அருகே வந்தபோது அந்த மர்ம நபரின் கூட்டாளிகள் இருவர் டேங்கர் லாரியில் ஏறிக்கொண்டனர். பின்னர், விழுப்புரம் நோக்கி சென்ற டேங்கர் லாரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கிருந்த ஒரு தனியார் ஓட்டலின் அருகே டேங்கர் லாரியை நிறுத்திவிட்டு அதில் நிரப்பப்பட்டிருந்த இன்ஜின் ஆயிலை விற்பனை செய்வது தொடர்பாக அந்த மூன்று பேரும் ஆலோசனை செய்துகொண்டிருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட லாரி டிரைவர் விமல் காந்தன், நைசாக போலீசாருக்கு செல்ஃபோன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனே விக்கிரவாண்டி போலீசார் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

 

தங்கள் அருகே போலீசார் வேகமாக வருவதைக் கண்டதும் அந்த மூன்று மர்ம நபர்களும் லாரியையும் டிரைவரையும் விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார், லாரி கடத்தப்பட்ட இடம் கண்டமங்கலம் காவல் நிலைய எல்லையில் உள்ளதால், கண்டமங்கலம் போலீசாரிடம் லாரியையும் டிரைவரையும் ஒப்படைத்தனர். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், விழுப்புரத்தைச் சேர்ந்த ரிஷாந்த் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயில் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியைக் கடத்தியது தெரியவந்தது. மேற்படி மூன்று பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள். டேங்கர் லாரி டிரைவர் விமல் காந்தன் சமயோசிதமாக போலீசாருக்குத் தகவல் அளித்ததும் விரைந்து போலீசார் வந்ததால் 40 லட்சம் மதிப்புள்ள ஆயில் மற்றும் டேங்கர் லாரியை மீட்க முடிந்தது என்கிறார்கள் போலீசார். இந்தக் கடத்தல் சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.