Skip to main content

‘தலை’ இல்லாமல் செயல்படும் 3,343 அரசுப் பள்ளிகள்; நிர்வாகப் பணிகள் முடங்கும் அபாயம்!

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

3343 government schools functioning without a headmaster
மாதிரி படம்

 

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதமாகும் நிலையில், 3,343 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

 

அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, கற்பித்தல் நடைமுறை, பாடத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. போதாக்குறைக்கு தற்போது 3000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாதது ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

இதுகுறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது: தமிழகத்தில் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்படும்போது தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராகவும், பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படாததால் பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 

 

தற்போதைய நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 670 மேல்நிலைப் பள்ளிகள், 435 உயர்நிலைப் பள்ளிகள், 1003 நடுநிலைப் பள்ளிகள், 1235 தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 3343 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. 

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்குதல், மிதிவண்டி, மடிக்கணினி வழங்குதல் மற்றும் ஆசிரியர்களின் வருகை, கல்வி, பள்ளி மேம்பாடு உள்ளிட்ட அனைத்து வகை நிர்வாகப் பணிகளும் தலைமை ஆசிரியர்களைச் சார்ந்துதான் உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் அங்கு பணியாற்றி வரும் மூத்த ஆசிரியர் ஒருவருக்கு தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வழங்கப்படுகிறது. அவ்வாறு கூடுதல் பொறுப்பு வழங்கப்படுவதால் குறிப்பிட்ட அந்த ஆசிரியர் கையாள வேண்டிய பாட வகுப்புகள் பாதிக்கப்படும். மேலும், அவருக்கு சக ஆசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பும் அளிக்கமாட்டார்கள். அதிமுக்கியத்துவம் வாய்ந்த தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பள்ளிக்கல்வித்துறை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் காட்டிய தலைமை ஆசிரியர்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
headmaster arrested under POCSO Act in Coimbatore

கோவையில் ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் ஆபாசப் படங்களைக் காட்டிய தலைமை ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவன் புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிராங்க்ளின் (44). இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம்  அப்பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடமும் தனது  செல்போனில் ஆபாச வீடியோவை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி இது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.  அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் பிராங்க்ளின் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதனிடையே பிராங்க்ளினை தலைமை ஆசிரியர் பதிலிருந்து பணியிடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.