Skip to main content

“இபிஎஸ் சொல்வது உண்மைக்கு புறம்பான செய்தி; அவர் கதையளக்கிறார்” - காட்டமாக மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர்

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

“What EPS is saying is untrue news; "He is telling a story," the minister flatly denied

 

கடந்த 21 ஆம் தேதி தமிழ்நாடு அரசு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தது. பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட்டை சவலைக்குழந்தை என விமர்சனம் செய்தார்.

 

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அவர், சர்க்கரை ஆலைகள். கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும், நெல் விவசாயிகளுக்கு ஆட்சிக்கு வந்தவுடன் குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும், கரும்புக்கு ஆதார விலையாக ரூபாய் 4,500 எதிர்பார்த்த நிலையில், அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றும் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டம் பற்றியும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது எனவும் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “2011 ஆம் ஆண்டில் சர்க்கரை ஆலைகளுக்காக சாகுபடி செய்யப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரம் எக்டராக இருந்த கரும்பு பயிரிடும் பரப்பினை, 95 ஆயிரம் எக்டராக குறைத்து மாபெரும் சாதனை புரிந்தவர் தான் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர். கரும்பு விவசாயிகளுக்கு பயனளித்து வந்த மாநில அரசு பரிந்துரை விலையை ரத்து செய்ததோடு இல்லாமல், 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மூடுவிழா கண்டவர். இன்று கரும்பு விவசாயிகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கிறார்.

 

2015-2016 அரவைப் பருவம் முதல் 2019-2020 அரவைப் பருவம் வரை கரும்பு விலையை உயர்த்தாமல் டன் ஒன்றுக்கு ரூபாய் 2,750 மட்டுமே வழங்கி வந்தவர்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

 

தற்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்கும் வகையில் 2020-2021 அரவைப் பருவ கரும்பு விலையாக, டன் ஒன்றுக்கு ரூபாய் 2,900 என்றும், 2021-2022 அரவைப் பருவ கரும்பு விலையாக டன் ஒன்றுக்கு ரூபாய் 2,950 என்றும் மேற்கண்ட இரண்டு அரவைப் பருவங்களுக்கும், சிறப்பு ஊக்கத் தொகையாக ரூபாய் 365 கோடியே 12 இலட்சம் அரசினால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கிட, வழிவகை கடனாக (Ways and Means) ரூபாய் 434 கோடியே 43 இலட்சம் இவ்வரசினால் வழங்கப்பட்டுள்ளது.

 

முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு விடுத்த வேண்டுகோள் காரணமாக, 1.9.2022 அன்றே நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு இதுவரை 3,082 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 28.12 இலட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, 3.6 இலட்சம் விவசாயிகளுக்கு 5,620 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டுள்ளது. தார்ப்பாய் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்பட்டு, எதிர்பாராது பெய்த மழையையும் சமாளித்து, விவசாயிகள் பாராட்டும் வண்ணம் நெல் கொள்முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல, மழையினால் பாதிக்கப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவினை அதிகப்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, ஒன்றிய அரசும் அதற்கான ஆணையை வெளியிட்டதை தொடர்ந்து, 20 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற ஆணையும் வெளியிட்டு விவசாயிகளுக்கு உதவி புரிந்ததுள்ளது தற்போதைய அரசுதான். 56,180 தார்ப்பாய்களும் 57,590 தார்ப்பாலின் உறைகளும் அனைத்துக் கொள்முதல் நிலையங்களிலும் தேவைப்படும் அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை சாதாரண இரகத்திற்கு முந்தைய அதிமுக அரசு, ரூபாய் 50 ஊக்கத்தொகையும், சன்ன இரகத்திற்கு ரூபாய் 70 ஊக்கத்தொகையும் கொடுத்து வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சாதாரண இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூபாய் 75 எனவும் சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூபாய் 100 எனவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பதவி ஏற்றவுடன், விவசாய பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-22 ஆம் ஆண்டில் நெல் கொள்முதலுக்கு ரூபாய் 360 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2022-23 ஆம் ஆண்டிலும் ரூபாய் 410 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு. ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

 

இவ்வரசு பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே, இதுவரை காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூபாய் 3,426 கோடி சுமார் 20 இலட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுத் தந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற இவ்வரசு, 2 வருட காலத்திலேயே இத்திட்டத்திற்கென ரூபாய் 4,639 கோடி வழங்கியதோடு மட்டுமல்லாமல், 2023-2024 ஆம் ஆண்டு இத்திட்டத்தினை செயல்படுத்த ரூபாய் 2,337 கோடியும், ஆக மொத்தம் ரூபாய் 6,976 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை கடந்த ஆட்சிக்காலத்தைவிட 265 சதவீதம் அதிகமாகும்.

 

எனவே, எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அதிக இழப்பீட்டுத் தொகை வழங்கியதாகவும் விவசாயிகள் கட்டிய காப்பீட்டு பிரீமியத் தொகை கூட கிடைக்கவில்லை எனக் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

 

10 ஆண்டு காலம் ஆட்சி பொறுப்பில் இருந்த இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இலவச மின்சார இணைப்பு வழங்காமல் இருந்துவிட்டு, இப்பொழுது மும்முனை மின்சாரம், இருமுனை மின்சாரம் என்று கதை அளக்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு துரிதமாக வழங்கப்பட்டதன் காரணமாக மொத்த சாகுபடி பரப்பு 1 இலட்சத்து 93 ஆயிரம் எக்டர் அதிகரித்து, மொத்தமாக 63 இலட்சத்து 48 ஆயிரம் எக்டராக தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு உயர்ந்திருக்கிறது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கைக்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய பாஜக அரசு மீது இ.பி.எஸ். பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
EPS on Central BJP Govt Allegation sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்றுடன் (17.04.2024) நிறைவு பெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவை அழிக்க இதுவரை யாரும் பிறக்கவில்லை. பொன்விழா கண்ட கட்சி அதிமுக. கடந்த 30 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கிறோம். எனவே இப்படிப்பட்ட கட்சியை அழிப்பது என்பது வெறும் கனவாகத் தான் முடியும். வெற்று வார்த்தையாகத் தான் முடியும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அளித்த வாக்குறுதிகளை இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதாவது சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குறுதிகள் மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பச்சை பொய் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அதே போன்று கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. 2014க்கு முன்பு கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரியை போட்டு மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

EPS on Central BJP Govt Allegation sensational

மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்துக்கு மட்டுமே தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். மாநில பிரச்சனைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தும் திட்டங்களை 10 ஆண்டுகளாக தமிழகத்திற்கு தரவில்லை. இயற்கைச் சீற்றங்களின்போது கேட்கப்படும் நிதியை மத்திய பாஜக அரசு முறையாக வழங்குவதில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. தேர்தல் முடிவுகளில் இழுபறி என வந்தால் யாருக்கு ஆதரவு என்பதை அந்த நேரத்தில் தெரிவிப்போம். உச்சநீதிமன்ற உத்தரவையே மதிக்காத தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து என்ன பயன்” எனக் கேள்வி எழுப்பினார். 

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.