Skip to main content

தேர்தல் பிரச்சாரத்தில் கண்கலங்கிய துரைமுருகன்...

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

 

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தரப்பிலும் ஊர் ஊராக, தெருத் தெருவாக திண்ணைகளில் அமர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மேலும் காங்கிரஸ் உட்பட கூட்டணிக் கட்சியினரை அரவணைத்து செல்லவில்லை என்ற முணுமுணுப்பு கேட்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன், ஆ ராசா போன்றவர்கள் தனித்தனியாக கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திக்கிறார்கள். 


 

 

இது ஒரு பக்கம் என்றால் அந்தியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் துரைமுருகன் பேசும்போது கண்கலங்கினார். இதுவும் மக்களை கவர்ந்துள்ளது ஏன் கண்கலங்கினார் துரைமுருகன்? நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். எங்கள் குடும்பத்தில் விவசாய பம்பு செட்டுக்கு மின் கட்டணம் செலுத்த முடியாமல் எனது தந்தை எனது தாயின் கழுத்தில் காதில் மூக்கில் இருந்த நகைகளை எல்லாம் அடமானம் வைத்தும் விற்றும் மின்கட்டணம் செலுத்தியுள்ளார்.


 

 

அப்போது நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். எனது தாயார் இறந்து போனதாக தகவல் வந்தது. ஊருக்குச் சென்று எனது தாயாரின் உடலை பார்த்தபோது என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. காரணம் எனது தாய் காது மூக்கு தொடைகளில் பொட்டுத் தங்கம் கூட இல்லாமல் விளக்குமாறு குச்சிகளை ஒடித்து அந்த ஓட்டைகளில் சொருகி இருந்தாள். அப்படிப்பட்ட விவசாய குடும்பத்தில் பிறந்த நான் தலைவர் கலைஞரின் ஆதரவினால் விவசாய அமைச்சரானேன். 

 

duraimurugan


 

அப்போது தலைவர் கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டார். அந்த உத்தரவில் அமைச்சர் என்ற முறையில் என்னை கையெழுத்திட சொன்னார். அப்போது எனது தாயார் முகம் நினைவுக்கு வந்தது. விவசாயிகளின் கஷ்டம் உணர்ந்தேன். அந்த உத்தரவில் சந்தோஷமாக கையெழுத்திட்டேன். இப்படி விவசாயிகளை வாழ வைத்தவர் கலைஞர் என்று சொல்லிக்கொண்டே துரைமுருகன் கண்ணீர் விட்டு அழுதார். துரைமுருகனின் பேச்சு பொதுமக்களை கவர்ந்தது. 
 

சார்ந்த செய்திகள்