
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்றொருபுறம் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
எரிகிற எரிப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழகத்தில் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (N.D.A- என்.டி.ஏ.) மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பாஜக - அதிமுகவின் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றார். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், ‘எப்போதும் அதிமுக தலைமையில் தானே கூட்டணி அமையும். தற்போது என்ன தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று அமித்ஷா பேசுகிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து எந்த வித மறுப்பும் இல்லாமல் இருக்கிறது’ என்று சொந்த கட்சியினரே குழப்பத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “2026 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போவது உறுதி. அது கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும் தான் இருக்கும். அதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்தும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக அழைத்தால் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிற்காகவும் பிரசாரம் செய்வேன். எடப்பாடி 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வாரா என்று எனக்கு தெரியாது. ஆனால், நான் 234 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமித்ஷா பேசியதற்கே என்ன விளக்கமளிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி இருக்கும் அதிமுக தலைமைக்கு, தற்போது டிடிவி தினகரன் பேசியிருக்கும் கருத்து மேலும் தலைவலியை தந்திருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.