Skip to main content

தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள நினைத்த தமிழக அமைச்சர்... அமைச்சரின் அலட்சியத்தால் ஒரு மாவட்டமே பதற்றத்தில்... என்ன நடந்தது?

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

admk


தனிமனித இடைவெளி உத்தரவைத் தொடர்ந்து காற்றில் பறக்கவிட்ட அமைச்சரின் அலட்சியப்போக்கினால், அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால், ஒரு மாவட்டமே பதற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
 


திருவாரூர் மாவட்டத்தில் தனிமனித இடைவெளியின்றி தொடர்ந்து அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி, செய்தியாளர்களைச் சந்தித்து வரும் அமைச்சர் காமராஜ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உணவு அமைச்சர் காமராஜ், மற்றும் அவரது நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வரும் மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், செய்தியாளர்கள் மற்றும் அ.தி.மு.க.-வினர், பொதுமக்கள் அனைவரையும் கண்டறிந்து கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என சமுக ஆர்வலர்களும், அதிகாரிகளும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இது குறித்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்கள், ஆட்சியரக அதிகாரிகள் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, "கரோனா தொற்றால் உலகமே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உணவு அமைச்சர் காமராஜ் மட்டும் எந்த ஒரு சலனமும் இல்லாமல், நோய்தொற்று என்பதே இல்லை என்பதுபோல தினசரி நான்கு ஐந்து நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் அ.தி.மு.க.-வினரை கூட்டிவைத்த நிகழ்வு தொடர்கதையாகவே இருந்தது. ஊரடங்கு கடுமையாக இருக்கும் சமயத்தில் அரசு வழங்கிய நிவாரணம், ரேசன் பொருட்களை ஒவ்வொரு இடத்திற்கும் அமைச்சரே தன் ஆட்களோடு நேரடியாகச் சென்று தன் கையால் வழங்கி துவக்கிவைத்தார். அப்போது பத்திரிகையாளர்களும், அதிகாரிகளும் மறைமுகமாகவே கரோனா தொற்றை அமைச்சர் காமராஜிடம் எடுத்துக்கூறினர். அதோடு அவரது உதவியாளர்கள், ஆதரவாளர்கள் மூலமாகவும் அவரது காதில் கரோனா குறித்தான அச்சத்தை வெளிப்படுத்தினர்.
 

 


அமைச்சர் பொறுப்பில் இருந்தும் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததன் விளைவு, அவரது நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொண்ட பத்திரிகையாளர் ஒருவருக்கு தொற்று வந்துவிட்டது. இதற்கு முழு பொறுப்பு அமைச்சர் காமராஜ்தான். முதலில் அவர் கரோனா டெஸ்ட் எடுத்துக் கொள்ளவேண்டும். தன்னுடை விளம்பரத்திற்காக பத்திரிகையாளர்களையும், அதிகாரிகளையும் கரோனாவிற்குப் பலி கொடுக்க நினைக்கக்கூடாது. இன்னும் அதிகாரிகளுக்கு, அ.தி.மு.க.-வினருக்கு எத்தனை பேருக்கு கரோனா இருக்கிறது என்பது தெரியவில்லை. முதலில் அமைச்சருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். இதை மாவட்ட ஆட்சியர் உடனடியாகச் செய்யவேண்டும்'' என்கிறார்கள்.

இதற்கிடையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் மருத்துவக்கல்லூரி முதல்வர், கரோனா பரிசோதனைக்காக அழைத்திருக்கிறார். இதனால் மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.