Skip to main content

வண்ணாரப்பேட்டை தாக்குதல் சம்பவம்! காவல்துறைக்கு தமிமுன் அன்சாரி கடும் கண்டனம்!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

 

வண்ணாரப்பேட்டை தாக்கதல் சம்பவத்தில் காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக போராடிய மக்களின் மீது நடத்தப்பட்ட கொடும் தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.

 

chennai



தங்கள் வாழ்வுரிமைகள் குறித்த அச்சத்தில் தவிக்கும் மக்கள் தொடர் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட விரும்பும்போது, அவர்களின் உணர்வுகளை கவனமாக எதிர்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.
 

 அமைதி வழியில் மக்கள் தொடர்ச்சியாக போராட ஒரு இடத்தை ஒதுக்கி தாருங்கள் என பல முறை கேட்டும் காவல்துறை அதை செவிமெடுக்கவில்லை.
 

இந்நிலையில் நேற்று வண்ணாரப்பேட்டையில்  கூடிய மக்கள் மீது மூர்க்கத்தனமாக காவல்துறையினர் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. 
 

அது தொடர்பாக வரும் காணொளி காட்சிகளை பார்க்கும் போது, பெண்களை குறிவைத்து தாக்குதல் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாகிறது.
 

 காவல்துறை தரப்பில் வெளியான முதல் கட்ட செய்திகள் யாவும்  தவறானவை என்பதும், இத்தாக்குதல் மூர்க்கத்தனமாக நடைப்பெற்றிருக்கிறது என்பதும் காணொளி காட்சிகள் மூலம் உறுதியாகிறது.
 

தடியடியை கண்ட அதிர்ச்சியில் 70 வயது முதிர்ந்தவர் உயிரிழந்த செய்தி மேலும் வேதனையளிக்கிறது.
 

 எனவே தடியடிக்கு உத்தரவிட்ட காவல் துறை  அதிகாரிகள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மனித நேய ஜனநாயக கட்சி சார்பில்  வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
 

 தடியடியைக் கண்ட அதிர்ச்சியில்  உயிர் துறந்த முதியவரின் குடும்பத்திற்கு ஆறுதல் உதவியாக 50 லட்சம்  ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் .
 

மேலும் போராட்டங்களை ஒடுக்க முனையாமல், எங்கெல்லாம், தொடர் காத்திருப்பு போராட்டங்களை அமைதி வழியில் நடத்த மக்கள் விரும்புகிறார்களோ, அங்கெல்லாம் காவல்துறை ஒரிடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
 

 ஒடுக்குமுறைகள்  மூலம் மக்களின் உணர்வுகளை அடக்கி விட முடியாது என்பதை ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் உணர வேண்டும் என்பதை நினைவூட்டுகிறோம்.
 

அது போல் மிகுந்த கவனத்தோடு போராட்ட களத்தை தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் முன்னெடுத்து செல்லும் வகையில் நன்கு திட்டமிட்டு அனைவரும் போராட்டத்தை ஒன்றுபட்டு  வழி நடத்த வேண்டும் என்றும் மனிதநேய ஜனநாயக கட்சியின்  சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.