Skip to main content

“தமிழ்நாட்டில் பிரிவினைவாதக் கருத்துகள் அதிகரித்துள்ளது...” - ஆளுநர் தமிழிசை

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

tamilisai soundararajan talks about tn governor  tamilnadu name viral issue

 

தமிழ்நாடு ஆளுநரின் தமிழ்நாடு குறித்த சர்ச்சை பேச்சுக்கு தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம். தமிழகம் பாரதத்தின் அடையாளம். உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமையாக இருக்கப்போகிறது" என்று பேசி இருந்தார். இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையாகி உள்ளது.

 

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சிவன் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கு வருகை தந்த தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் எனக் கூறி இருக்கும் கருத்தின் உட்பொருளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிரிவினைவாதக் கருத்துகள் தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக வர ஆரம்பித்துள்ள நேரத்தில் இந்தக் கருத்தை அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக் கொள்ளக்கூடாது என்கிற அர்த்தத்தில் அவர் கூறியுள்ளார். நான் தமிழ்நாட்டைச் சார்ந்தவள். என் மொழி தமிழ் மொழி. என் மாநிலம் தமிழ்நாடு. என் நாடு பாரத தேசம்” என தமிழக ஆளுநரின் சர்ச்சை பேச்சுக்கு தெலங்கானா ஆளுநர் விளக்கம் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்