Skip to main content

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது! ராமதாஸ்

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

 

விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் சீரழிவதை அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1250-க்கும் மேற்பட்ட விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் எந்தவித பாரமரிப்பும் இல்லாமல், வாகனங்கள் நிறுத்துமிடங்களிலும், வெட்ட வெளியிலும் குப்பைகளைப் போல கிடத்தி வைக்கப்பட்டிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. உலகப்புகழ் பெற்ற சிலைகளுக்கும், பிற கலைச் சின்னங்களுக்கு சென்னையில் பாதுகாப்பு மிக்க ஓர் இடம் ஒதுக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

 

pmk


 

சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள சிலரின் வீடுகளிலும், பண்ணைத் தோட்டங்களிலும் கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய சோதனைகளில் ஏராளமான பழங்கால சிலைகள், கற்சிலைகள், மரச்சிற்பங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஏராளமான தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் மதிப்பு பலநூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்தகைய சிலைகள் அவற்றுக்குரிய மதிப்புடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்,  கிண்டியில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகம் அமைந்துள்ள பொருளாதாரக்குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தின் தரைத்தளத்தில் எந்தவித பாதுகாப்புமின்றி  குவித்து வைக்கப்பட்டுள்ளன.
 

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் மதிப்பு பலநூறு கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிலைக்கடத்தல் மற்றும் சிலை பதுக்கல் தொடர்பான வழக்குகளுக்கு அவை தான் முக்கிய ஆதாரம் ஆகும். ஆனால், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் அவை வைக்கப்பட்டுள்ள நிலையைப் பார்க்கும் போது, அவற்றை யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்றே தோன்றுகிறது. இது சிலைகளுக்கு மட்டுமின்றி, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த ஆபத்து தடுக்கப்பட வேண்டும்.


 

வெட்ட வெளியில் எந்த பாதுகாப்புமின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகள் வெயிலிலும், மழையிலும் கிடக்கும் போது அவை பல்வேறு வேதிவினைகளுக்கு உள்ளாகும். இதனால் சிலைகள் அழகையும்,  சிறப்பம்சங்களையும் இழந்து சாதாரணமான கற்களாகவும், மரத்துண்டுகளாகவும் மாறிவிடக்கூடும்.  மழையில் நனைந்து, வெயிலில் காயும் போது மரச்சிலைகளில் வெடிப்பு ஏற்படும். இந்த சிலைகளில் உள்ள சிறப்பம்சங்களுக்காகத் தான் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சிலைகளை அலட்சியத்தால் இழந்து விடக் கூடாது.
 

குற்ற வழக்குகள், கடத்தல் வழக்குகள் ஆகியவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர ஊர்திகள், மகிழுந்துகள், சரக்குந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் கதி என்ன? என்பதை அனைவரும் அறிவார்கள். அவை வெயிலிலும், மழையிலும் கிடந்து துருப்பிடித்து வீணாகின்றன. பல வாகனங்களின் சக்கரங்கள்,  எஞ்சின்கள் கூட திருடப்படுகின்றன. இவ்வாறாக மிகப்பெரிய அளவிலான பொருளாதாரம் யாருக்கும் பயன்படாமல் போகும். விலைமதிப்பற்ற சிலைகளுக்கும் அதே நிலை ஏற்பட்டு விடாமல் தடுக்க வேண்டும்.


 

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் விலை மதிப்பற்றவை என்பது மட்டுமின்றி, கலைநயமும் மிக்கவை ஆகும். ஆகவே, இந்த சிலைகளைக் கொண்டு ஓர் அருங்காட்சியகம் அமைத்து, ஒவ்வொரு சிலையின்  வரலாற்றையும் அதற்கு அருகில் இடம் பெறச் செய்தால் அது அனைவரின் வரவேற்பையும் பெற்று, சுற்றுலா முக்கியத்துவம் கொண்ட இடமாக மாறக்கூடும். அத்தகையக் கலைக்கூடம் சென்னையின் இன்றையத் தேவையும் கூட. பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை பாதுகாத்து வைக்க திருவான்மியூர், திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக அம்முயற்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கடைசியாக கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், சிலைக்கடத்தல்  தடுப்புப் பிரிவினர் முறைப்படி விண்ணப்பித்து அதை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை கூறியுள்ளது.
 

உலகின் அனைத்து நாடுகளும் ஏங்கக்கூடிய கலைச் சின்னங்கள் நம்மிடம் இருக்கும் நிலையில், அவை பராமரிப்பின்றி சீரழிவதை அனுமதிக்கக்கூடாது. கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை முறைப்படி பெற்று, அதில் அருங்காட்சியகம் அமைத்து விலைமதிப்பற்ற சிலைகளை பாதுகாக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.