Skip to main content

சட்டமன்றமா, நாடாளுமன்றமா? - அதிமுகவின் முடிவு என்ன?

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

tn assembly election results admk leaders wins

 

தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான முடிவுகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. அதேபோல், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்துள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.

 

சட்டமன்றமா, நாடாளுமன்றமா? - அதிமுகவின் முடிவு என்ன?

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். இரண்டு மன்றங்களிலும் உறுப்பினராக இருக்க முடியாது என்பதால் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

 

இதில் வைத்தியலிங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கே.பி.முனுசாமி கடந்த ஆண்டுதான் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். இருவரும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால், ஒரத்தநாடு, வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும். அல்லது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தால் அவர்களின் மீதமுள்ள பதவிக் காலத்திற்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும்.

 

ஆறு வருட பதவிக்காலம், இவர்களுடைய இடத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு கிடைக்காது. வைத்தியலிங்கம் இடத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர் ஒரு வருடம் மட்டுமே மாநிலங்களவை உறுப்பினராக பணிபுரிய முடியும். ஆனால், இதிலும் சிக்கல் உள்ளது. புதிய சட்டசபையின் பதவிக்காலம் தொடங்குவதால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களே வாக்களிப்பார்கள்.

 

தற்போதுள்ள எண்ணிக்கைப்படி, தமிழக சட்டமன்றத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களின் பலம் அதிகமாக இருக்கிறது. மாநிலங்களவை காலியிடங்கள் திமுக வசம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு அதிமுக தலைமை விரைவில் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கே.பி.முனுசாமி இடத்தில் அதிமுகவின் மூத்த தலைவரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான செம்மலைக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.