Skip to main content

எடப்பாடி பழனிசாமியின் துதிபாடும் கட் அவுட்டுகள்! (படங்கள்)

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

 

தென் மாவட்டத்தின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை நடத்திய தொகுதிகளையே டார்கெட்டாக வைத்து, தனது தேர்தல் பரப்புரையை நடத்திவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பரப்புரை நடத்தப்படுகிற இடங்களில் எல்லாம் தான் செயல்படுத்திய திட்டங்களை மட்டுமே முன்னிலைப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.

 

பொதுவாக அ.தி.மு.க.வி்ன் தலைவியான ’ஜெ’ தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும்போதெல்லாம், அ.தி.மு.க.வினர் நகரமெங்கும் வாழ்த்து கட் அவுட்கள் மற்றும் பெண்களைக் கொண்டு கும்ப மரியாதை அணி வகுப்பு நடத்துவர். தற்போது எடப்பாடி பழனிசாமி பரப்புரைக்காக தென் மாவட்டம் வந்தபோது அவருக்கான வரவேற்புகள் ’ஜெ’வையும் மிஞ்சிவிட்டன. அனைத்துப் பகுதிகளிலும் இது போன்று தான். குறிப்பாக மகளிர் மற்றும் அ.தி.மு.க.வின் தொழில்நுட்ப அணிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தின் மேடையின் பின்னே மெகா திரை பளிச்சிடும். அதில், செயல்படுத்தப்பட்ட திட்டங்களை டிஜிட்டல் வீடியோவாக்கி 'எடப்பாடியாருக்கு நன்றி' என்ற கெட்டப்புடன் வீடியோ ஒளிபரப்பி பரப்புரையைக் கொண்டு செல்கின்றனர் ஐ.டி. அணியினர்.

 

குறிப்பாக, சங்கரன்கோவிலில் மனதிற்குள் தோன்றும் வார்த்தைகளை எல்லாம் வரவேற்பு கட் அவுட்களாக்கி நகரையே கட் அவுட்களால் போர்த்தியிருந்தனர் அ.தி.மு.கவினர். ஐ.டி. அணியின் ஏற்பாட்டில் கேரள பெண்கள் போன்று வெண்பட்டு உடுத்தி, வெண் கொற்றக் குடையுடன், கேரள செண்டை மேளங்கள் முழங்க, பெண்களின் வரவேற்பு, கும்ப மரியாதை வரவேற்பு மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு என்பதை வெளிப்படுத்துகிற வகையில் 50- க்கும் மேற்பட்ட சிறுவர்களின் தலையில் பச்சைத் தலைப்பாகை கட்டி, எடப்பாடியை வரவேற்கும் வகையில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட சிறுவர்கள், வாடிப் போய்விட்டனர்.

 

பிரச்சாரப் பகுதிகளில் எல்லாம் ஒரேமாதிரியான பரப்புரையை வைத்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, முஸ்லிம் மக்கள் அதிகமாக இருக்கும் கடையநல்லூரில் குடியுரிமைக்கு எதிராகப் போராடியவர்களின் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும். பள்ளிவாசல்கள், தர்காக்கள் புனரமைக்க ரூபாய் 3 கோடி தொகுப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

 

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய நூற்றுக்கணக்கானவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போதைய தேர்தலை மனதில் கொண்டு, அந்த வழக்குகளையும் ரத்து செய்வது பரிசீலனையில் உள்ளது என்று அறிவித்தார்.

 

பிரச்சாரம் முடிந்து கூட்டம் கலைந்தநேரத்தில் வரவேற்பிற்காக வைக்கப்பட்ட கரும்புகள், வாழைக் குலைகளைக் கூட்டத்தினர், போட்டி போட்டுக் கொண்டு பிய்த்தெடுத்துச் சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.