Skip to main content

தமிழைக் கட்டாயப் பாடமாக்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! ராமதாஸ்

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

 

தமிழகத்திலுள்ள சி.பி.எஸ்.இ மற்றும் பிற கல்வி வாரிய பள்ளிகள் தமிழைக் கட்டாய பாடமாக கற்பிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழைக் கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடம் ஆக்குவதற்காக பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் தனியார் பள்ளிகள் தமிழ் மொழிப் பாடத்தை கற்பிக்க மறுக்கின்றன. தமிழ் மொழிக்கு தனியார் பள்ளிகள் செய்யும் இந்தத் துரோகம் மன்னிக்க முடியாததாகும்.

 

Ramadoss



 

தமிழ்நாட்டில் அனைத்து கல்வி வாரிய பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்நாள் ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தேன். மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டத்தை கடைப்பிடிக்கும் அனைத்து அரசு பள்ளிகளும் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக கற்றுத் தருகின்றன. மெட்ரிக் பள்ளிகளைப் பொறுத்தவரை 90 விழுக்காடு பள்ளிகளில்  தமிழ் கட்டாயப்பாடமாக்கப்பட்டு விட்டது. மொழிச் சிறுபான்மையினர் என்று கூறிக்கொள்ளும் பள்ளிகள் மட்டும் தான், தமிழ் கற்பிக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி, தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் மூலம் விலக்கு பெற்றுள்ளன. உயர்நீதிமன்றம்  அளித்த  விலக்கு தற்காலிகமானது தான். உயர்நீதிமன்றம் விலக்கு அளித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து  விட்ட நிலையில், இனியும் கட்டமைப்பு இல்லை என்று கூறி அந்தப் பள்ளிகள் தப்பிக்க முடியாது. வரும் கல்வியாண்டில் அந்த பள்ளிகள் தமிழைக் கட்டாயப் பாடமாக்க விட்டால், தமிழக அரசு உயர்நீதிமன்றத்தை அணுகி, அவற்றுக்கு அளிக்கப்பட்ட விலக்கை நீக்கி தமிழை கட்டாயப்பாடமாக்க முன்வர வேண்டும்.
 

மாநிலக்கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றைக் கடந்து தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத் திட்டப் பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படுவதை உறுதி செய்வது தான் மிகப்பெரிய சவால் ஆகும்.  2007-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மாநிலக் கல்வி வாரிய பாடத்திட்டப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றில் தமிழைக் கட்டாயப் பாடமாக்கிய அரசு, அதன் பின் 8 ஆண்டுகள் கழித்து 2015-16ஆம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயமாக்கியது. அதற்கான அரசாணையை கடந்த 18.09.2014 அன்று தமிழக அரசு பிறப்பித்தது. அதன்பின் 5 ஆண்டுகள் முடிவடைந்த பிறகும் 90% பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயப்பாடம் ஆக்கப்படவில்லை. தமிழக அரசின் ஆணையை மதிக்காத தனியார் சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது தமிழக அரசு இனியும் கருணை காட்டக்கூடாது.
 

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இயங்கி வரும் இந்திய இடைநிலை கல்விச் சான்றிதழ் (ICSE) பாடத்திட்டம், இந்திய பள்ளித்தேர்வு சான்றிதழ் குழு (CISCE) பாடத்திட்டம், கேம்பிரிட்ஜ் வாரிய பாடத்திட்டம் ஆகியவற்றை பின்பற்றும் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப்பாடமாக்கி தனி அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.



 

தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக ஆந்திரம், தெலுங்கானா, கேரளம், கர்நாடகம் உட்பட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் கட்டாயப் பாடமாக்கப் பட்டுள்ளன. அங்குள்ள மாநிலக்கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில் மட்டுமின்றி, சி.பி.எஸ்.இ, இந்திய இடைநிலை கல்விச் சான்றிதழ் பாடத்திட்டம், இந்திய பள்ளித் தேர்வு சான்றிதழ் குழு பாடத்திட்டம், கேம்பிரிட்ஜ் வாரிய பாடத்திட்டம் ஆகிய பாடத்திட்டங்களை கடைபிடிக்கும் பள்ளிகளிலும் மாநில மொழிப் பாடம்  கட்டாயமாகும். மாநில மொழிப் பாடத்தை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு பல்வேறு விதமான தண்டனைகளை வழங்கவும் அந்த மாநிலங்களின் உள்ளூர் மொழி கட்டாயப்பாட சட்டம் வகை செய்கிறது.
 

உதாரணமாக கேரளத்தில் உள்ள எந்த கல்வி வாரிய பள்ளிகளாக இருந்தாலும், மலையாளத்தை கட்டாயப் பாடமாக கற்பிக்கத் தவறினால் முதல் இரு முறை எச்சரிக்கையும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் மலையாள மொழிப் பாடத்தை கற்பிக்கத் தவறும் பள்ளிகளின்  அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கேரள அரசு எச்சரித்திருக்கிறது. அதேநேரத்தில் மலையாளத்தை கட்டாய பாடமாக கற்பிக்கும் பள்ளிகளுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளும்  வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் இத்தகைய தண்டனை மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்தி அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
 

தமிழ்நாட்டில் 624 சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. மற்ற பாடத்திட்டங்களை கடைபிடிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் ஆகும். அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் ஆகும். தமிழ்நாட்டில் இவ்வளவு பெருந்தொகையான மாணவர்கள் தமிழைப் படிக்காமல்  பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதை அனுமதிக்க கூடாது. எனவே, தமிழகத்திலுள்ள சி.பி.எஸ்.இ மற்றும் பிற கல்வி வாரிய பள்ளிகள் தமிழைக் கட்டாய பாடமாக கற்பிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழைக் கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.