Skip to main content

அன்புமணி வெற்றிக்காக தருமபுரியில் முகாமிட்டுள்ள ராமதாஸ்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி  விழுப்புரம் தொகுதியில் பிரச்சாரம் தொடங்கினார். தொடர்ந்து 27 நாட்களாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். தருமபுரியில் போட்டியிடும் தனது மகன் அன்புமணி ராமதாஸ்க்காக கடந்த சில நாட்களாக தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, பொதுமக்களைச் சந்தித்து திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

Dharmapuri ramadoss


தொலைதூரங்களில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் ராமதாஸ், அங்குள்ள மக்களைச் சந்தித்து பேசுகிறார். ராமதாஸ் காரில் உள்ள லைட் போடப்பட்டு, அந்த ஒளியில் தான் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது ராமதாஸ், அங்கு கூடியிருக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்கிறார். பின்னர் அக்குறைகளை களையவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு மக்கள் ஆதரவளிப்பதாக நம்பிக்கை கொடுக்கின்றனர்.

 

ராமதாஸ் பங்கேற்கும் திண்ணைப் பரப்புரைக் கூட்டங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளன. அந்தக் கூட்டங்களில் அவர் அதிகம் பேசுவதில்லை. மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் பேசுகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பேசுகின்றனர். தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட வேண்டும்; மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பது தான் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்களின் கோரிக்கைகள் தான் பாமக கொள்கை என்று ராமதாஸ் கூறும் போது அங்குள்ள மக்கள் அனைவரும் கைத்தட்டி ஆதரவு தெரிவிக்கின்றனர்.

 

தருமபுரி தொகுதியில் வரகூர், இபிகொல்லஹள்ளி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களை ராமதாஸ் நேற்று சந்தித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் திண்ணைப் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.