Skip to main content

ராமதாஸ், அன்புமணி போடும் திட்டம்... அதிர்ந்து போன எடப்பாடி... பாமக மீது கோபத்தில் அதிமுக! 

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

அ.தி.மு.க.விடம் இருந்து தங்களுக்கான தொகுதிகளைப் பெறுவதில் பாமகவும் தேமுதிகவும் தெளிவாக இருப்பதுபோல் அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். அண்மையில் தைலாபுரத்தில் ஆலோசனை நடத்திய டாக்டர் ராமதாஸ், இங்கு இருக்கும் 15 மாநகராட்சி மேயருக்கான தொகுதிகளில் நாம் வேலூரையும் சேலத்தையும் வாங்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு அன்புமணி, முதல்வர் எடப்பாடியின் சொந்தத் தொகுதியான சேலத்தை நமக்குத் தருவார்களா? அதனால் சேலத்துக்கு பதிலாக சென்னையைக் கேட்போம் என்று பதில் சொல்லியிருக்கார். சென்னையை பா.ஜ.க.வும் குறி வைத்திருப்பதை சொன்ன ராமதாஸ், உள்ளாட்சியின் அனைத்து நிலைகளிலும் நாம் 20 சதவிகித தொகுதிகளை வாங்கியே தீர வேண்டும் என்று  அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.
 

pmk



இதேபோல் தே.மு.தி.க.விலும் ஆலோசனைகள் நடந்து வருகிறது. அதுவும் சேலம், வேலூர், திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் தங்களுக்கு 2 தேவை என்றும் கூறிவருவதாக சொல்லப்படுகிறது. மொத்தமாக 25 சதவீத உள்ளாட்சி சீட்டுகளை வாங்கிவிடவேண்டும் என்பதும் தே.மு.தி.க.வின் முடிவில் இருப்பதாகவும் கூறுகின்றனர். கடந்த எம்.பி. தேர்தலின் போது பா.ம.க. முந்திக்கொண்டது போல், இந்த முறை சீட் ஷேரிங்கில் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று கட்சிப் பிரமுகர்களிடம் உறுதியான குரலில் சொல்லியிருக்கார் பிரேமலதா. மேலும் மேயர் பதவி விஷயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு கறார் காட்டி வருகிறார் எடப்பாடி என்று கூறுகின்றனர்.அதோடு அதிமுக சீனியர்கள் பலரும் பாமக கேட்பதை கொடுத்தால் மற்ற கூட்டணி கட்சியினரும் கேட்பார்கள்.பிறகு கூட்டணிக்கே ஆபத்து ஏற்படக் கூடிய சூழல் வரும் என்று எடப்பாடியிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.