Skip to main content

"இந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது பிரதமரின் விருப்பம்" - அண்ணாமலை பேட்டி

Published on 08/11/2022 | Edited on 08/11/2022

 

"The Prime Minister's wish is that there should be no Hindi imposition anywhere" - Annamalai interview!

 

மதுரை மாவட்டத்தில் இன்று (08/11/2022) காலை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர் கூறியதாவது, "மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. ஒரு அற்புதமான திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். 'எனது பூத் வலிமையான பூத்' என்கின்ற திட்டம். அதன் துவக்க விழாவிற்காக, இன்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன். கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் என்னோடு இருக்கிறார்கள். கட்சியை அடிமட்டத்திலே பலப்படுத்த வேண்டும். குறிப்பாக, அனைத்து இடங்களிலும் நம்முடைய பூத் கமிட்டி வலிமையாக இருக்க வேண்டும். பூத் கமிட்டி என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் பணியாற்றாமல், 365 நாட்களும் மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, புதிதாக வடிவமைக்கப்பட்ட பூத் கமிட்டியை இன்று துவங்கியிருக்கின்றோம். 

 

கடந்த 2019 ஆம் ஆண்டு வரை இந்தி என்பது திணிக்கப்பட்டிருந்தது. கட்டாய மொழியாக இருந்தது. 1986 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இரண்டாவது கல்விக் கொள்கையில் இந்தியைக் கட்டாய மொழியாக வைத்திருந்தார்கள். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தி என்பது கட்டாயப் பாடமாக இருந்தது. 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வந்த பிறகு தான் இந்தி என்பது ஆப்சனாக கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தி திணிப்பு எங்கேயும் இருக்கக் கூடாது என்பது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்; பா.ஜ.க. கட்சியின் விருப்பம். மூன்றாவது மொழி என்பது ஆப்ஷனல். 

 

மத்தியில் இருந்து வரக்கூடிய அமைச்சர்கள் சொல்கிறார்கள், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்று. ஏன் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள் என்றால், ‘இல்லம் தேடிக் கல்வி’ புதிய கல்விக் கொள்கையில் இருக்கக் கூடிய அம்சம். அதே புதிய கல்விக் கொள்கை இன்னொரு பெயரில் வருகிறது. நம்மைப் பொறுத்த வரையில், அது வந்தால் சரி. அது எந்த பெயரில் வந்தால் என்ன? மக்களுக்கு நல்லது நடந்தால் சரி என்று பார்க்கின்றோம். 

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவப் பாடத் திட்டத்தில் முதலாமாண்டு இந்தியைக் கொண்டு வந்த போது, தமிழகத்தில் மருத்துவப் படிப்பிலும், பொறியியல் படிப்பிலும் தமிழில் கொண்டு வாருங்கள் என்று முதலில் குரல் கொடுத்தது தமிழக பா.ஜ.க.. இதற்காக, தமிழகம் முழுவதுமே ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இன்றைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். நமது அமைச்சர் சொல்கிறார், பொறியியல் பாடத்தில் தமிழ் கொண்டு வந்திருக்கிறோம் என்று. இன்றைக்கு பொறியியல் பாடத்திட்டத்தில் முழுமையாகத் தமிழை வைத்து படிக்கக் கூடியவர்கள் 69 பேர் தான். 

 

ஐந்து கல்லூரிகளில் தான் அது இருக்கிறது. அப்படி இருக்கும் போது தமிழை நீங்கள் என்ன வளர்த்திருக்கிறீர்கள்? ஒரு லட்சம் பேர் படிக்கக் கூடிய பொறியியல் கல்லூரிகளில் வெறும் 69 பேர் தமிழில் படித்தால், எப்படி தமிழ் வளரும்?" என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.