Skip to main content

‘ஜெயலலிதாவை விட பழனிசாமி திறமையானவர்?’ - டிடிவி தினகரன் பதில்

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

'Is Palaniswami more capable than Jayalalitha?' DTV Dhinakaran answers

 

நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பெற்று ஏறத்தாழ 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுகவின் இந்த தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 

 

இந்நிலையில் மதுரை கோச்சடையில் உள்ள தனியார் உணவகத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஒன்றிணையாததே தோல்விக்கு காரணம் என அண்ணாமலை சொல்கிறார். அது அவருடைய கருத்து. பொதுவாகவே இபிஎஸ் மற்றும் அவரை சேர்ந்த ஒரு சிலரின் ஆணவம், ஆட்சியிலிருந்த போது வந்த வரவின் காரணமான திமிர் இவைகள் தான் அதிமுக தோல்விக்குக் காரணம். உச்சநீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை கொடுக்கவில்லை என்றால் இன்னும் மோசமாக தோற்றிருப்பார்கள். ஜெயலலிதா 2006ல் 65 இடங்கள் தான் வெற்றி பெற்றார். 

 

ஆனால், எடப்பாடி பழனிசாமி 70 தொகுதிகளை வென்றுள்ளார் என்று கேட்பர். எடப்பாடி வென்றது அதிமுக ஆட்சி செய்த பின் வந்த தேர்தலில்... நான்காண்டுகள் பழனிசாமி ஆட்சி செய்தாலும் அதற்கு முன் ஜெயலலிதா ஆட்சி செய்துள்ளார். ஆட்சி அதிகாரம், அதனால் கிடைத்த பணபலத்தால் தான் அதிமுக ஓடிக்கொண்டு உள்ளது. ஆனால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது 1989 பொதுத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா தனித்து நின்று 28 தொகுதிகளில் வெற்றி பெற்றார். ஈரோட்டில் மட்டும் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். உச்சநீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை அவர்களிடம் திணித்துள்ளது. சின்னத்தை வைத்துக்கொண்டே இந்த பாடுபட்டுள்ளார்கள். வரும் காலத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் திமுகவை வீழ்த்த முடியும். இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். 

 

பழனிசாமி பிடியில் அதிமுக இருக்கும் வரை இன்னும் பலவீனப்படும். இன்னும் மோசமான நிலையை அடையும். அதனால் தான் காலம் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களை ஒன்றிணைக்கும். இதுபோன்ற நயவஞ்சகர்கள் தீயவர்களுக்கு காலம் தக்க தண்டனை கொடுக்கும். ஒரு சிலரின் தவறான முயற்சியால் கட்சியை கபளீகரம் செய்து வைத்துள்ளார்.” எனக் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.