Skip to main content

“ஏசுநாதர் மாதிரி சுமந்துட்டு இருக்கேன்..” - வாக்கு சேகரிப்பில் தழுதழுத்த விஜயபாஸ்கர்

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

Minister vijayabaskar election campaign at viralimalai constituency
                                                      கோப்புப் படம்

 

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று, அன்று பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனையடுத்து அரசியல் கட்சியினர் தமது தேர்தல் பணிகளில் வேகம் காட்டிவருகின்றனர். அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்கள் தொகுதியில் மக்களோடு மக்களாக கலந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். 

 

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இவர் அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் நேற்று (23.03.2021) விராலிமலை தொகுதிக்குட்பட்ட கல்குளத்துப்பட்டி பகுதியில் வாக்கு சேகரித்த விஜயபாஸ்கர், “இந்தக் கரோனாவில் ஏழரை கிலோ எடை குறைந்து நிற்கும் விஜயபாஸ்கர், என் மனசு எவ்வளவு கஷ்டப்படும். அதை யாராவது யோசித்தாங்களா. எனக்கும் ஷுகர் இருக்கு, பி.பி. இருக்கு; நானும் மாத்திரை சாப்பிட்றன். நான் கரெக்டா மாத்திரை சாப்பிட்டு, கரெக்டா ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, மதியம் ஒருமணி நேரம் தூங்கி, வாக்கிங் போறதுனு இருந்தா என் உடம்பும் நல்லா இருந்திருக்குமே. எனக்கும் தலை சுத்தல் வருது, மயக்கம் வருது. ஆனா மனசுக்குள்ள வெறி இருக்கு, எடுத்துக்கிட்ட பொறுப்புல வேலைய ஒழுங்கா செய்யணும். ஏசுநாதர் சிலுவை சுமந்தது மாதிரி, இந்த விராலிமலை தொகுதியை நான் சுமந்துட்டு இருக்கேன்” என்று வாக்கு சேகரிப்பின்போது தழுதழுத்தார் விஜயபாஸ்கர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா வழக்கு; சி.பி.ஐக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chennai special court strongly condemns CBI at vijayabaskar case

தமிழகத்தில் குட்கா பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்குகளில் அவற்றை வைத்திருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா பொருட்கள் விற்கப்பட்டதாகவும், வரி ஏய்ப்பு நடைபெற்றதாகவும் வருமான வரித்துறையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டதோடு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி,  மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என 11 பேருக்கு எதிராக கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அவற்றைத் திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வழக்கில் விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று (15-04-24) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ தரப்பில், வழக்கின் விசாரணைக்காக ஒப்புதல் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற நீதிபதி, ‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீதான குட்கா வழக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? எனக். கூறி கண்டனம் தெரிவித்தார். மேலும், வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சி.பி.ஐக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மே மாதம் 2ஆம் தேதி ஒத்தி வைத்தார்.  

Next Story

அதிக வாக்கு வாங்கிக் கொடுத்தால் ஆடி கார் பரிசு! மாஜி மந்திரிக்கு அதிமுக வழக்கறிஞர் அறிவிப்பு

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
audi car  prize for ex-minister if he gets more votes for AIADMK

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளரும், மாநில அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் 50 ஆவது பிறந்த நாளில் அதிரடி பரிசாக அவர் பொறுப்பில் உள்ள 4 நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்தால் அவருக்கு ஆடி கார் பரிசளிப்பதாக அதிமுக வழக்கறிஞர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்மன்றத் தொகுதிகளும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரிந்து கிடக்கிறது. இந்த நிலையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுகவைவிட அதிக வாக்குகள் வாங்கிக் கொடுத்தால், அவருக்கு வேட்பாளர் சார்பில் இன்னோவா கார், புதுக்கோட்டை நகரத்தில் அதிக வாக்கு வாங்கித் தரும் வட்டச் செயலாளர்களுக்கு தலா 5 பவுன் தங்கச்சங்கிலி பரிசளிப்பதாக அறிவித்தார். இந்த நிலையில், இன்று மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

இதே போல தடாகத்தில் 81 அடி உயரத்தில்  பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் சிவன் சிலை கொண்ட கீரமங்கலம் மெய்நின்றநாதர் ஆலயத்தில் அதிமுக வழக்கறிஞர் நெய்வத்தளி நெவளிநாதன் சிறப்பு வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்று அதிமுக அமைப்புச் செயலாளர், வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பிறந்த நாள். அவரது பிறந்த நாளில் மெய்நின்றநாதர் ஆலயத்தில் இருந்து அவருக்கு ஒரு பரிசு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கும் பொறுப்பில் உள்ளார். அதாவது 4 நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் பெற வைத்தால் "ஆடி" கார் பரிசாக வழங்குகிறேன் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தொகுதியில் அதிக ஓட்டு வாங்கினால் இன்னோவா கார், தங்கச்சங்கிலி பரிசு பரிசு அறிவித்தார் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர். அதே அதிமுகவில் 6 தொகுதியில் அதிக வாக்கு வாங்கிக் கொடுத்தால் மாஜிக்கு ஆடி கார் என்ற அதிமுக வழக்கறிஞரின் அறிவிப்பு. சபாஸ் சரியான போட்டி என்கிறார்கள் ர.ர க்களே!