Skip to main content

இந்தியில் உரையாற்றிய ஆளுநர்; சட்டமன்றத்தில் சலசலப்பு

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

meghalaya governor budget session hindi issue in assembly 

 

சமீபத்தில் நடந்து முடிந்த மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கான்ராட் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தது. தற்போது மேகாலயாவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டம் என்பதால் அம்மாநில ஆளுநர் பாகு சவுகான் உரையுடன் தொடங்கியது. சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றும் போது ஹிந்தியில் உரையாற்றினர். அப்போது மக்களின் குரல் கட்சியைச் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

 

இதனைத் தொடர்ந்து மக்களின் குரல் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான அர்த்தன் மில்லர் பேசுகையில், "மேகாலயா ஹிந்தி பேசும் மாநிலம் அல்ல. அசாம் மொழி எங்கள் மீது திணிக்கப்பட்ட போது மொழியின் அடிப்படையில் பிரிந்த மாநிலம் தான் மேகாலயா. எங்களுக்கும் எங்கள் மாநில மக்களுக்கும் புரியும் வகையில் தான் ஆளுநர் பேச வேண்டும்" என்றார்.

 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய முதல்வர், "ஆளுநரால் ஆங்கிலத்தில் உரையைப் படிக்க முடியாது. அதனால் அவர் ஹிந்தியில் படித்தார். இருப்பினும், ஆளுநர் உரையானது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆங்கிலத்தில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதனை பெரிதுபடுத்த வேண்டாம்" என்றார்.

 

இதனால் சட்டமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேகாலயாவில் ஆங்கிலமானது அலுவல் மொழியாக உள்ள நிலையில் சட்டமன்றத்தில் ஆளுநர் இந்தியில் உரையாற்றியது பெரும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்