Skip to main content

அரசு வேலை மோசடி; அதிமுக ஒ.செ. பணம் வாங்கிய வீடியோ ஆதாரம்; கில்லாடி நல்லதம்பி

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

Government job fraud! AIADMK union secretary paid video evidence!

 

அதிமுக ஆட்சியில், விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் விஜய நல்லதம்பி. இவர் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர். 

 

விஜய நல்லதம்பி சிவகாசி தாயில்பட்டி அருகே கோட்டையூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவருக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 ½ லட்சம் வாங்கினார்.  கிருஷ்ணவேணியின் கணவர் தங்கதுரையும், கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷும், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராமலட்சுமியின் கணவர் கணேசனும், விஜய நல்லதம்பியின் சொந்த ஊரான ராமத்தேவன்பட்டியிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து அந்தப் பணத்தைக் கொடுத்தனர். 

 

கிருஷ்ணவேணியின் கணவர் தங்கதுரை, விஜயநல்லதம்பியிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்தார்.  அப்போது, "உன் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்துணவு அமைப்பாளர் போஸ்டிங் வாங்கித் தர்றேன். மூன்றரை லட்சம் கொடு. வேலைக்கான ஆர்டர் வாங்கித் தர்றேன்" என்று விஜய நல்லதம்பி கூற,  தங்கதுரையும்  நம்பிக்கையோடு கொடுத்துள்ளார்.  

 

கிருஷ்ணவேணியும் தங்கதுரையும்  தாயில்பட்டி கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சமும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ. 1.5 லட்சமும் திரட்டியுள்ளனர். மொத்த பணத்தையும் விஜய நல்லதம்பியிடம் கொடுத்தபோது,  உடன் சென்ற கிருஷ்ணவேணியின் தம்பி சதீஷ், யாருக்கும் தெரியாமல் தன்னுடைய செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்தார்.

 

நெடுநாட்களாகியும் சத்துணவு அமைப்பாளர் வேலையும் வாங்கித் தராமல் வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல்  அலையவிட்ட விஜய நல்லதம்பி அந்தப் பணத்தை மோசடி செய்துள்ளார்.  பிறகு அரசு வேலைக்காக பணம் கொடுத்தபோது  தம்பி சதீஷ் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளரிடம் புகார் அளித்தார் கிருஷ்ணவேணி. 

 

காவல்துறையின் விசாரணையில், குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பது தெரிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். அந்த வீடியோவில் விஜய நல்லதம்பி என்ன பேசியிருக்கிறார் என்றால்,  “14-ஆம் தேதி இன்டர்வியூ. 15-ஆம் தேதி ஆர்டர் காபி வந்திரும். அமைச்சருக்கு கொடுக்கணும். விருதுநகர் கலெக்டரே வாங்குறாரு. மூன்றரை லட்சத்தை கம்பல்சரியா கொடுத்தாகணும்.” என்று அளந்துவிடுகிறார். அப்போது  பணம் கொண்டு வந்தவர்கள், “எந்த திசையைப் பார்த்து பணம் கொடுக்கணும்? என்று கேட்கிறார்கள். அதற்கு  விஜய நல்லதம்பி,   “மனசு நல்ல மனசா இருந்தா போதும்” என்று சொல்கிறார். 

 

கிருஷ்ணவேணி தொடர்ந்த இந்த வழக்கில்,  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விஜய நல்லதம்பியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.  அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விஜய நல்லதம்பி மேல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஆட்சேபனை தெரிவித்ததால் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கவில்லை.  

 

உயர்நீதிமன்ற வேலைக்கு ஆர்டர் வாங்கித் தருவதாகவும் விஜய நல்லதம்பி மோசடி செய்திருக்கிறார்.  தன்னுடைய சொந்த அண்ணன் ரவிச்சந்திரன், அண்ணி வள்ளி மீது  ரூ.70 லட்சம் மோசடி புகார் கொடுத்தார் விஜய நல்லதம்பி. அது பொய்யான வழக்கென்று சாட்சியங்கள் மூலம் நிரூபணமானது. இந்த விஜய நல்லதம்பி தான் ரூ.3 கோடி மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தெறிக்கவிட்டார். ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி கைதாகி சிறையில் அடைபட்டதும் இன்றுவரையிலும் நிபந்தனை ஜாமீனில் அல்லாடுவதும்  இந்த விஜய நல்லதம்பியின் கைங்கரியத்தினால்தான்.  

 

தன் மீதான குற்றச்சாட்டுக்கு விஜய நல்லதம்பி அளித்த விளக்கம் இது - “அரசியல்ல இருந்தா யாராவது ரெண்டு பேர் புகார் கொடுக்கத்தான் செய்வாங்க. அரசு வேலைக்கு மத்தவங்ககிட்ட பணம் வாங்கிக் கொடுக்குறது மட்டும்தான் எனக்கு பொழப்புன்னு கிடையாது. எங்கே தொலைச்சோமோ, அங்கேதானே தேட முடியும். எல்லா பழியவும் என்மேல போடறாங்க.” என்கிறார். பலே தில்லாலங்கடியாக இருக்கிறார் விஜய நல்லதம்பி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.