Skip to main content

"நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியே இருக்காது" - தொல்.திருமாவளவன்!

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

election campaign thol thirumavalavan mp at chidambaram

 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வாக்குச் சேகரித்தார்.

 

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் கூறியதாவது, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அவ்வப்போது உள்ள அரசியல் சூழலுக்கு ஏற்ப இடங்களில் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி மூக்கை நுழைத்து தமிழகத்தில் வேரூன்றப் பார்க்கிறது. மேலும் அ.தி.மு.க., பா.ம.க. முதுகில் ஏறி சவாரி செய்து உள்ளே நுழையப் பார்க்கிறது. 

 

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றக் கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு ஆறு சீட்டு என்றாலும் பரவாயில்லை என்ற தொலைநோக்குப் பார்வையுடன் கூட்டணியில் முதல் கையெழுத்திட்டோம். மதவாதத்தை தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவது பாரதிய ஜனதா கட்சியின் நோக்கமாக உள்ளது. பா.ஜ.க. அரசியல் கட்சி அல்ல, அந்த கட்சியை இயக்குவது ஆர்.எஸ்.எஸ்.தான், ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைதான் பா.ஜ.க.வின் கொள்கை . ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சமூக நீதிக்கு எதிரான இயக்கம்.

 

பா.ம.க., பா.ஜ.க. இரட்டைக் குழந்தைகள், பா.ம.க. சாதி வெறியைத் தூண்டுகிறது. பா.ஜ.க. மதவெறியைத் தூண்டுகிறது. எந்த காலத்திலும் நாங்கள் சீட்டுக்காக அ.தி.மு.க., தி.மு.க. என மாறி, மாறி பேரம் பேசியது இல்லை. எங்களது நிலைப்பாடு எப்போதுமே ஒன்றாகத்தான் இருக்கும். கூட்டணிக்காகக் கொள்கையை மாற்றிக் கொள்ள மாட்டோம்.

 

அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் தமிழக மக்களுக்கு பெரும் துரோகம் செய்துள்ளது. அ.தி.மு.க., பா.ம.க. எம்.எல்.ஏ.க்ககளை பா.ஜ.க. விலைக்கு வாங்கி தி.மு.க.வுக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உட்கார திட்டம் தீட்டியுள்ளது. இந்திய தேசிய விடுதலைக்குப் போராடாத ஒரு இயக்கம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது. இதனை பாரதிய ஜனதா கட்சி முழுங்கிவிடும். பா.ம.க.வை நீர்த்துப்போகச் செய்துவிடும். ஓபிசி இட ஒதுக்கீட்டை என்றுமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்த்தது இல்லை. ஆனால் ஓபிசி இட ஒதுக்கீட்டை எதிர்த்த பாரதிய ஜனதாவுடன், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

 

அனைத்துச் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் ஒரு வார்டில் கூட வெற்றிபெற முடியாது. ஆனால், 20 தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது. இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய ஒரே காரணத்திற்காக தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்த கோட்சே சுட்டுக் கொன்றான். சமூகநீதி என்று கூறும் பா.ம.க. இவர்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளது.

 

எம்.ஜி.ஆர்., இரட்டை இலை என்பது வேறு, ஜெயலலிதா இரட்டை இலை என்பது வேறு; எடப்பாடியின் இரட்டை இலை; பாரதிய ஜனதா கட்சியின் பின்புலத்துடன் உள்ள இரட்டை இலை ஆகும். இரட்டை இலை மற்றும் மாம்பழத்திற்கு வாக்களித்தால் அது பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்ததாக ஆகிவிடும். எனவே, சமூக நீதியைக் காக்க இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை வெற்றிபெறச் செய்யுங்கள்" இவ்வாறு தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார். 

 

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.