Skip to main content

“எத்தனை தலைநகரங்கள் அமைக்க முடியும்?” முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020

 

இன்று (22/09/2020) ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தை முடித்துவிட்டு, சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோது, செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; தொடர்ந்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த சீரிய நடவடிக்கையால் பல்வேறு பலனை தற்போது தமிழகம் பெற்றுவருகிறது. அரசு கூறும் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

 

நாடாளுமன்றத்தில் விவசாயச் சட்டத்திற்கு எதிராகப் பேசியதால், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும். மத்திய அரசின் வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய திட்டமாகத்தான் அது இருக்கும்.

 

தற்போது உள்ள மசோதா, ஏற்கனவே தமிழகத்தில் பின்பற்றி வரப்படுகிறது. மற்ற மாநிலங்களில் இந்தச் சட்டம் இல்லாததால் தமிழக விவசாயிகள் எந்த வகையிலும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். தமிழக மக்கள், விவசாயிகளுக்கு எதிராக எந்தத் திட்டங்கள் வந்தாலும் எதிர்ப்போம். வேளாண் மசோதாக்கள் குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்.” என்று தெரிவித்தார்.


8 மாதத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு “ஸ்டாலின் ஜோதிடம் பார்ப்பவராக இருக்கிறார். நாங்கள் ஜோதிடம் பார்க்கவில்லை. மக்களைத்தான் நம்புகிறோம். துரைமுருகன் மகனை யாராவது மிரட்ட முடியுமா? சாதாரண தி.மு.க தொண்டனைக்கூட மிரட்ட முடியாது. மதுரையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம் குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவக் கல்லூரிகள் வழங்கியுள்ளோம். அதேபோன்ற கல்வியில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம். 

 

ரூ.14,000 கோடி மதிப்புள்ள காவிரி குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் என பல மாவட்டங்களுக்குச் சென்று அங்கு உள்ள ஏரிகளில் தடுப்பணை கட்டி வருகின்றோம்.” என்றார்

 

Ad

 

தமிழகத்தின் இரண்டாம் தலைநகர கோரிக்கை குறித்த கேள்விக்கு “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாவட்டத்தையும் தலைநகரமாக அறிவிக்கக் கோரி கூறுவதால் எத்தனை தலைநகரங்கள் அமைக்க முடியும்.”  

 

தமிழகத்தில் லாக்கப் டெத் அதிக அளவில் இருப்பது குறித்த கேள்விக்கு, “சிறை மரணம் என்றால் உரிய விசாரணை நடத்தப்படும். அதில், யார் தவறு செய்தாலும் அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். இறைவன் கொடுத்துள்ள உடலை மக்களுக்குத் தியாகம் செய்வதற்காக, தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு கரோனா சூழலிலும் மக்கள் சேவையில் தொடர்ந்து தமிழக அரசு பணியாற்றிக் கொண்டு இருக்கிறது. டெல்லி போன்ற வட மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் தமிழகத்தில், குறிப்பாகச் சென்னையில் கரோனா குறைந்து வருவது அமைச்சர்கள் முயற்சியால்தான்.” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.