Skip to main content

மாஃபா பாண்டியராஜனின் வணிக - அரசியல்: விருதுநகர் மாவட்டத்தில் முணுமுணுப்பு

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

ADMK Ex. Minister Pandiyarajan virudhunagar politics

 

அரசியலில் இருந்து விலகி மீண்டும் தனது தொழிலை விரிவுபடுத்துவதில் முனைப்புடன் இருந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சென்னையிலிருந்து விருதுநகருக்கு வந்து திரும்பவும் அரசியல் முகம் காட்டி வருகிறார்.  

 

விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ராஜேந்திரபாலாஜியைச் சந்தித்துவிட்டு, விருதுநகர் நகராட்சித் தேர்தல் பணியில் தன்னை ஈடுபடுத்திவருகிறார் பாண்டியராஜன். ஆனாலும், அவரது வழிகாட்டுதலை முழுமனதோடு ஏற்பதற்கு விருதுநகர் அதிமுக கவுன்சிலர் வேட்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். கடந்த 17-ஆம் தேதி, எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலைபோட பாண்டியராஜன் வந்தபோது, அங்கு மிட்டாய் கொடுத்துக்கொண்டிருந்த அதிமுகவினர் ‘எஸ்கேப்’ ஆனார்கள். ஆனாலும்,  அண்ணா நினைவுநாளில் அண்ணா சிலைக்கு மாலைபோட்ட பாண்டியராஜன், விருதுநகர் நகராட்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு வெளியேவந்த கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு, சால்வை அணிவித்து வாழ்த்தினார். 

 

ADMK Ex. Minister Pandiyarajan virudhunagar politics

 

மோசடி வழக்கில் சிறை சென்று நிபந்தனை ஜாமினில் ராஜேந்திரபாலாஜி வெளிவந்திருக்கும் நிலையில், விருதுநகரில் கட்சிப் பணிகளை ஆற்றிவரும் மாஃபா பாண்டியராஜனை தொடர்புகொண்டோம், “ஆமா.. முறைப்படி அறிவிப்பெல்லாம் வரல. மேல இருந்து சொல்லிருக்காங்க. விருதுநகர் டவுணை பார்க்கச் சொல்லிருக்காங்க. அப்புறம், சாத்தூர், அருப்புக்கோட்டையிலும் பிரச்சாரம் பண்ண வந்திருக்கேன். இந்த மூணு நகராட்சியவும் நான் பார்க்கிறேன். சிவகாசி மாநகராட்சியை, மற்றதை ராஜேந்திரபாலாஜி பார்த்துக்குவாரு” என்றார்.

 

மா.செ.வான ராஜேந்திரபாலாஜி மீதுள்ள அச்சத்தால், ‘ஒரு உறையில் இரண்டு கத்திகளா?’ என விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுகவினர், மாஃபா பாண்டியராஜனை அழையாத விருந்தாளியாகப் பார்ப்பதோடு, “மாஃபா வேலை வாய்ப்பு நிறுவனத்தின் தலைவரான பாண்டியராஜன், சியெல் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் மற்றும் சியெல் ஐடி சொல்யூஷன் ஆகிய நிறுவனங்களையும் நடத்திவருகிறார். அவருடைய தொழிலில் இன்னொரு கிளையை விருதுநகரில் தொடங்கியிருக்கிறார்.  லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு, கோடிகளில் வருமானம் என்ற திட்டத்தோடு செயல்படும் அவருடைய அரசியல் இலக்கு, விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆவதுதான். அவரைப் பொறுத்தமட்டிலும் வணிகமும் அரசியலும் வேறல்ல” என்று முணுமுணுக்கின்றனர்.

 

ஓட்டுக்கு பணம் என்று முதலீடு செய்து, அரசியலை வியாபாரம் ஆக்கியதால்தானே, பெரும்பாலான அரசியல்வாதிகள் வளமாக இருக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.