Skip to main content

இந்தி தெரியாத முதல்வர், இந்தியில் பேசிய பிரதமர்... ஆலோசனைக் கூட்ட சர்ச்சை...

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

zoramthanga says he dont understand matters on pm meeting due to hindi

 

முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் இந்தியில் பேசுகிறார், ஆனால் எனக்கு இந்தி தெரியாததால் குழப்பம் ஏற்படுகிறது என மிசோரம் முதல்வர் சொரம்தங்கா தெரிவித்துள்ளார்.
 
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காகப் பிரதமர் மோடி  நேற்று முதல்வர்கள் உடனான கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மிசோரம் முதல்வர் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். 

வழக்கமாக மக்கள் முன் உரையாடும்போதும், அரசியல் தலைவர்களுடன் உரையாடும்போதும் பிரதமர் மோடி இந்தியிலேயே பேசுவது வழக்கம். அந்த வகையில் ஊரடங்கு குறித்து பேசும்போது கூட மக்கள் மத்தியில் இந்தியில்தான் பேசினார் பிரதமர். ஆனால் பிரதமரின் இந்த முடிவு பல்வேறு தரப்பிலும் விமர்சனங்களைப் பெற்றது. நாடே இக்கட்டான நிலையில் உள்ளபோது எடுக்கப்பட்டுள்ள முக்கியமான ஒரு முடிவைக் குறித்து மக்களிடம் பேசும்போது அனைவருக்கும் சென்றடையும் வகையில் பிரதமர் பேச வேண்டும் எனக் கருத்துகள் எழுந்தன. குறைந்தபட்சம் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் ஒருவரையாவது பிரதமர் மோடி அருகில் வைத்துக்கொண்டு பேச வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், முதல்வர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்தி மொழியிலேயே பேசியுள்ளார். இந்தக் கூட்டம் முடிந்து இதுகுறித்து பேசிய மிசோரம் முதல்வர் சொரம்தங்கா, "அவர்கள் அனைவரும் இந்தியில் பேசுகிறார்கள் என்பதால், அங்குள்ளவர்கள் சொன்ன ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை. எனக்கு இந்தி தெரியாது" எனத் தெரிவித்தார். பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மிசோரத்தில் நில அதிர்வு!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Earthquake in Mizoram

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 62 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டன.

அதே சமயம் கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சூழலில் நேற்று (04-01- 2024) நள்ளிரவு 12:38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.9 புள்ளிகளாகப் பதிவாகி உள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்திருந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தின் லங்லை என்ற பகுதியில் இன்று (05.01.2024) அதிகாலை 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நில அதிர்வானது பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.