Skip to main content

செலவுக்கு பணம் கேட்ட மகன் சுட்டுக்கொலை;தந்தை கைது

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Son shot after asking for money for expenses; father arrested

மகன் செலவுக்கு பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த தந்தை மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் பிரசாத். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டுள்ளது. ஓங்கோல் பகுதியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஆயுதப்படை காவலர் பிரசாத் இருந்து வந்துள்ளார்.

அவருடைய மகன் கமல் தினமும் டூவீலரில் அவரை அவர் பணிபுரியும் பகுதிக்குக் கொண்டு சென்று விடுவதை வாடிக்கையாகக் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல டூவீலரில் தந்தையை வாக்குப் பெட்டிகள் வைத்திருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர், தந்தையிடம் செலவுக்கு பணம் வேண்டும் என 20000 ரூபாய் என கேட்டுள்ளார். 'எதற்காக இவ்வளவு பணம் கேட்கிறாய்' என கேள்வி எழுப்பிய ஆயுதப்படை காவலர் பிரசாத் மகனுடன் சண்டையிட்டுள்ளார்.

அப்பொழுது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே கமல் துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கமலின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து காவலர் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

செலவுக்கு பணம் கேட்டதால் மகனையே தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Counterfeiting issue; Increase in the number of victims

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை இந்த சம்பவத்தில் தொடர்புடைய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏசுதாஸ் (வயது 39) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 10 பேருக்கு ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் குமார் (வயது 37) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.