Skip to main content

"புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்"- எம்.எல்.ஏ. தலைமையிலான கூட்டத்தில் வலியுறுத்தல்

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

MLA emphasis Decision on Statehood for Puducherry

 

’புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை’ என்பது தொடர்பாக சுமார் 20-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர்கள் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டம் புதுச்சேரி தனியார் ஓட்டலில் நேரு எம்.எல்.ஏ. தலைமையில், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவனர் மங்கையர்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில செயலாளர் ஸ்ரீதர், தமிழர் களம் மாநில அமைப்பாளர் கோ.அழகர், மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகன்நாதன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீர.மோகன், மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்று 11 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே மத்திய அரசால் நியமிக்கப்படும் அரசு அதிகாரிகள் புதுச்சேரி சட்டமன்றத்தை மதிப்பதில்லை. வேலை வாய்ப்பின்மையால் புதுச்சேரி இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உயர்ந்த பதவியில் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தற்போது பத்தாயிரம் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அதற்கு வயது தளர்வு வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் புதுவை மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மக்களால் தேர்வான முதல்வரின் அதிகாரத்தைப் பறிக்கும் விதமாகவே அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அரசால் அறிவிக்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துணைநிலை ஆளுநரும், தலைமைச் செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தடையாக இருக்கிறார்கள். அதிகாரிகள் சொல்வதைக் கேட்க வேண்டிய நிலைமை அரசுக்கு உள்ளது. 

 

MLA emphasis Decision on Statehood for Puducherry

 

இந்தியாவில் 10 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மிசோரம், சிக்கிம் மாநிலங்களுக்கு மாநிலத் தகுதி இருக்கும்போது 14 லட்சம் மக்கள்தொகை கொண்ட புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தராதது வியப்பளிக்கிறது. எனவே சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை என்ற தீர்மானத்தை மீண்டும் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

 

மேலும், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும், அதில் முதல் கட்டமாக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்தடுத்து மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கங்கள் நடத்துவது குறித்தும், போராட்டங்கள் நடத்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என  நேரு எம்.எல்.ஏ. தனது பேட்டியின் போது தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.