Skip to main content

மிரட்டிய ராஜ நாகம்! சாதாரணமாக பிடித்த நபர்! 

Published on 05/01/2022 | Edited on 05/01/2022

 

King Cobra caught in kerala

 

மதுரையிலிருந்து செல்லும் கேரளாவின் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை, தென்காசி மாவட்டத்தின் கேரள எல்லையான புளியரை வழியாக கேரளாவின் கோட்டைவாசல் மற்றும் ஆரியங்காவு நகரம் வழியாகச் செல்கிறது. இயற்கையிலேயே கேரளா, மலை சார்ந்த வளம் கொண்ட அடர்ந்த காடுகளைக் கொண்டவைகள். நெடுஞ்சாலை செல்லும் ஆரியங்காவின் சாலையை ஒட்டி விவசாயியான குஞ்சுமோனின் வீடு உள்ளது. புது வீடு கட்டி அண்மையில்தான், அதில் தன் குடும்பத்துடன் குடியேறியிருக்கிறார் குஞ்சுமோன்.

 

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் குஞ்சுமோனின் மூத்த மகனான விஜித் (43) வீட்டிலுள்ள அறை ஒன்றின் சோபாசெட்டில் அமர்ந்து வழக்கம் போல் செல்போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அது சமயம் ஏதோ கருமையான தன்மையுள்ள ஒன்று சோபாவினடியில் நெளிவதைக் கண்டவர் குனிந்து பார்த்து போது பெரிய பாம்பு ஒன்று சுடுண்டு போய் ஒண்டிக் கிடந்து கண்டு அலறியிருக்கிறார். அவரது அலறல் சப்தம் கேட்டுப் பதறியபடி வந்த பெற்றோர்கள் சோபாசெட்டை நகர்த்திய போது சீறிய பாம்பு, தலையைத் தூக்கியிருக்கிறது. பீதியும் அதிர்ச்சியும் தாங்காத பெற்றோர்கள் சப்தமிட அக்கம் பக்கத்து மக்கள் திரண்டு வந்து பாம்பை விரட்ட முயல, அந்தப் பாம்போ அவர்களை நோக்கிச் சீறிய போது பயத்திலும் மிரட்சியிலும் மக்கள் அலறியபடி சிதறி ஒடியிருக்கிறார்கள். பாம்பை விரட்ட வழிதெரியாத நிலையில் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்தவர்களும் அத்தனை நீளமுள்ள பாம்பை பிடிக்க முடியாமல் போயிருக்கிறது.

 

King Cobra caught in kerala

 

அதன் பின் வனத்துறையினர் திருவனந்தபுரத்திலிருக்கும் பாம்பு பிடிப்பதில் வல்லவரான பாபா சுரேஷை வரவழைத்திருக்கிறார்கள். இரவு 9 மணியளவில் வந்த பாபா சுரேஷ் மிகவும் சுலபமாக முழங்கால் அளவு கனம் கொண்ட நீண்ட நெடிய பாம்பினைப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்ற விட்ட பிறகே பகுதி மக்களின் பயமும் பீதியும் அடங்கி ஆசுவாசப்பட்டிருக்கிறார்கள்.

 

King Cobra caught in kerala

 

இது குறித்துப் பாம்பு பிடி பாபா சுரேஷ் கூறியதாவது; “இது கொடிய வகையும் கடும் விஷத் தன்மையும் கொண்ட ராஜநாகம். சுமார் எட்டரை அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் மிகச் சிறியது. இதன் பின்னே 12, 18 அடிகள் நீளம் வரை இந்த வகை பாம்புகள் உள்ளன. கடுமையான விஷத் தன்மை கொண்ட இந்த ராஜநாகம் ஒரே கடியில் பெரிய யானையை வீழ்த்தி சாகடித்துவிடும் பயங்கரம் உள்ளது. எனில், மனுஷங்க ரொம்ப சாதாரணம். இரவு இரை எடுத்த ராஜநாகம், வீடு காட்டை ஒட்டியிருப்பதால் நுழைந்து பதுங்கியிருக்கிறது. வீட்டில் பளிங்கு பதிக்கப்பட்டதால் பாம்பால் ஊர்ந்து செல்ல முடியாமல் வழுக்குவதால் இத்தனை நேரம் பாம்பு ஒண்டியிருக்கிறது. நிஜத்தில் தரையில் சீறிப்பாயும் தன்மையுள்ளது” என்று அதிரவைத்தார். ராஜநாகத்தின் மிரட்டலால் பீதியும் அச்சமும் அப்பிப் போன மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீள வெகு நேரம் பிடித்திருக்கிறது.

 

பாம்பு என்றால் படையும் நடுங்கும் தானே.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.