Skip to main content

ஆளுநர் போட்ட உத்தரவு; எஸ்.எப்.ஐ. அமைப்பினர் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு! 

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
Governor's Order; A case against the SFI  in strict sections!

கேரள மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளுக்கு கவர்னர் ஆரிப் முகம்மது கான், பதவிகளை வழங்கி வருவதாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐ.யினர் கவர்னரின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு கவர்னர் செல்லுமிடமெல்லாம் அவருக்கெதிராக ஒரு மாதமாகத் தொடர்ந்து கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜன-27 அன்று மாநிலத்தின் கொல்லம் நகரையடுத்த கொட்டாரக்கரை நகரில் ஒரு சாது சாமியாரைப் பார்ப்பதற்காக கவர்னர் சென்றதாகச் சொல்லப்படுகிறது. கவர்னர் சென்று கொண்டிருந்த நேரம் வழியில் நிலமேல் பகுதியினருகே எதிர்பாராத வகையில் அந்தப் பகுதியில் திரண்டிருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவ அமைப்பான எஸ்.எப்.ஐ. நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு கொடியை கவர்னருக்கெதிராகக் காட்டியதுடன் கண்டனப் பேனர்களுடன் கவர்னரின் காரின் முன்னே பாய்ந்திருக்கின்றனர்.

இதனால் கடும் ஆத்திரமான கவர்னர் ஆரிப் முகம்மதுகான், காரை நிறுத்தச் சொல்லி இறங்கி வேக வேகமாக ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கித் தன் கையை உயர்த்தி எதிர் கோஷமிட்டார். அவர்களுடன் கடுமையான குரலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். கவர்னரின் பாதுகாப்பு போலீசார் மற்றும் வழியோரங்களில் பாதுகாப்புகாப்பின் பொருட்டு நிறுத்தப்பட்ட போலீசார் அனைவரும் திரண்டு கவர்னருக்கு மேலும் பாதுகாப்பு அளித்ததோடு மற்றுமொரு பிரிவு போலீசார், பிரச்சினை பெரியதாகி விடாதபடி தடுத்தவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுற்றி வளைத்து அப்புறப்படுத்தினர். அந்த ஏரியாவில் பதட்டமான கலவரச் சூழல். ஆனால் கவர்னர் பாதுகாப்பு வளையத்தையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தன் குரலை உயர்த்தியிருக்கிறார். பின்னர் அவரைத் தொடர்ந்து வந்த போலீசாரையும் கடுமையாகக் கண்டித்தவர், கமிசனரைக் கூப்பிடு, டி.ஜி.பி.யை வரச் சொல் என்று உத்தரவிட்டவர் சிறிது தூரம் ஆவேசமாக நடந்து சென்று சாலையின் அந்தப்பக்கமாக உள்ள டீக்கடை ஒன்றின் சேரை எடுத்து ரோட்டில் போட்டமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

Governor's Order; A case against the SFI  in strict sections!

காவல் மற்றும் பிற அதிகாரிகள் அவரைச் சமாதானப்படுத்தியும் கவர்னர் கேட்பதாகத் தெரியவில்லையாம். சிறிது நேரத்திற்குப் பின் கேரள டி.ஜி.பி.யான ஷேக் தர்வேஷ் சாகிப் கவர்னரைத் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியவரிடம் கடுப்பான தொனியில் பேசிய கவர்னர், போராட்டம் நடத்தியவர்கள் மீது, நான்-பெய்லபிள் (ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவு) பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

வேறு வழியில்லாமல், போராட்டம் நடத்திய எஸ்.எப்.ஐ. அமைப்பினர் 19 பேர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகே, தனது இரண்டு மணி நேர போராட்டத்தைக் கைவிட்டு விட்டுப் புறப்பட்டார்.

இதனிடையே மத்திய உள்துறை, மற்றும் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்ட கவர்னர் ஆரிப் முகம்மதுகான், மாநில போலீசாரின் பாதுகாப்பு தனக்கு வேண்டாம். என் உசுரே போயிடும். மத்திய பாதுகாப்பு வேண்டும் என்று அறிக்கை அனுப்பியிருக்கிறார். அதையடுத்தே கவர்னருக்கு, மத்திய உள்துறை சி.ஆர்.பி.எப்பின் இசட்பிளஸ் கமாண்டே பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது.

மாநில கவர்னர் நடந்து கொண்ட இந்த சம்பவம் கேரளா மட்டுமல்ல நாடு முழுக்கப் பரவி அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக கேரளாவில் கவர்னர் மீதான எதிர்மறையான எண்ணங்களையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

Governor's Order; A case against the SFI  in strict sections!

இந்த சம்பவத்திற்கு மூன்று நாட்கள் முன்பு கேரள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் பட்ஜெட் உரையை வாசிக்க முறைப்படி அழைக்கப்பட்ட கவர்னர், பட்ஜெட்டின் உரையை முழுக்கப் படிக்காமல் ஆரம்பத்திலும் கடைசியிலுமாக இரண்டே வரிகளை மட்டும் வாசித்து விட்டுக் கிளம்பியது முதல்வர் பினராயி விஜயன், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் கவர்னரின் நடடிவக்கையின் மீது கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

கவர்னரின் தர்ணா பற்றியறிந்த கேரள முதல்வரான பினராயி விஜயன், தன் கண்டன அறிக்கையில், கவர்னருக்கு சிறந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்திற்கான பட்ஜெட்டை முறைப்படி கவர்னருக்கு வாசிக்க நேரமில்லை. ஐந்து நிமிடத்தில் கிளம்பிப் போய் விட்டார். ஆனால் அவர் ரோட்ல இரண்டு மணி நேரம் இருப்பதற்கு நேரமிருக்கிறது. இந்த அரசை ரொம்ப அவமானப்படுத்துகிற கவர்னரை வெளியேற்றணும். மாநில வளர்ச்சிகளுக்குத் தேவையான மசோதாக்கள், பிற மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் அனைத்தையும் ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டார். மத்திய அரசு கேரளாவுக்கு எழுபதாயிரம் கோடி தரவேண்டும் ஆனால் இரண்டாயிரம் கோடி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். வேறு எங்கும் கடன் பெறக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். ஆனாலும் நெருக்கடியோடு நெருக்கடியாய் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு 90 பாலங்களை மாநிலம் முழுக்க அமைத்துள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் திரண்டு போய் அடுத்த வாரம் டெல்லியில், ஆளுநரைத் திரும்பப்பெறக் கோரியும், மாநிலத்திலத்திற்கு முறையாகத் தர வேண்டிய நிதியினை அளிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்துகிற முடிவிலிருப்பதாகவும் தகவல்கள் றெக்கை கட்டுகின்றன.

சார்ந்த செய்திகள்

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.