Skip to main content

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த கேப்டன் அமரீந்தர் சிங்!

Published on 29/09/2021 | Edited on 29/09/2021

 

amit shah - AMARINDER SINGH
FILE PIC 

 

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் தொடர்ந்துவருகிறது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை நிறுத்த, சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.

 

இருப்பினும் கோஷ்டி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

 

இதனையடுத்து காங்கிரஸ் மத்திய தலைமை, சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக நியமித்தது. இதனையடுத்து சரண்ஜித் சிங் சன்னி இரண்டு துணை முதல்வர்களோடு பதவியேற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து பஞ்சாபின் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது.

 

இதனையடுத்து திடீர் திருப்பமாக  நவ்ஜோத் சிங் சித்து, தனது பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பஞ்சாப் அமைச்சரவையில் சிலர் சேர்க்கப்பட்டது குறித்து சித்து அதிருப்தி அடைந்ததாகவும், அதனால் அவர் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாகத் தகவல் வெளியானது.

 

இதற்கிடையே முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கேப்டன் அமரீந்தர் சிங், பாஜக தேசிய தலைவர் நாட்டாவையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பாஜகவில் இணைவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்தநிலையில் கேப்டன் அமரீந்தர் சிங் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இது பஞ்சாப் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்