Skip to main content

“சில மணி நேரம் மட்டும் அமலாக்கத்துறை விசாரிக்கலாம்” - உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

Ed can investigate only for a few hours Senthil Balaji argument in the Supreme Court

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

 

முன்னதாக, செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும். எனவே செந்தில் பாலாஜி வழக்கின் இறுதித் தீர்ப்பை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும்” எனத் தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்திருந்தார்.

 

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என நீதிபதி நிஷா பானு தெரிவித்திருந்தார். மேலும் இரு நீதிபதிகள், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்த பின் நாங்கள் ஏன் நிலுவையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும்போது, இந்த வழக்கை முடித்து வைக்கலாமே எனக் கேள்வி எழுப்பி அதன் பின்னர் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்த வழக்கு நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

 

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு இன்று நீதிபதிகள் போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதத்தை முன் வைக்கையில், “செந்தில் பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தினமும் சில மணி நேரம் மட்டும் அமலாக்கத்துறை விசாரிக்கலாம். சிறிது, சிறிதாக குணமடைந்து வருகிறார். அவர் மருத்துவமனையில்தான் உள்ளார்” என வாதத்தை முன் வைத்திருந்தார். இந்த வழக்கில் இன்னும் அமலாக்கத்துறை தனது தரப்பு வாதங்களை முன் வைக்கவில்லை. நாளை அமலாக்கத்துறை தனது தரப்பு வாதத்தை முன் வைக்க உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்