Skip to main content

"அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம்" - தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிக்கை...

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

Corona 3rd wave peaks in October

 

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய கரோனாவின் இரண்டாவது அலை பேரிழப்புகளை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் தினசரி பாதிப்பு 4.5 லட்சத்தையும் கடந்து சென்றது. இந்நிலையில், தற்போது படிப்படியாக கரோனா பாதிப்பு குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் வரும் அக்டோபரில் கரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் என எச்சரித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் பிரதமர் அலுவலகத்தில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

 

அந்த அறிக்கையில், "மூன்றாவது அலையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் இருக்க வேண்டும். மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், வெண்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

 

இதுவரை தடுப்பூசித் திட்டத்தில் குழந்தைகள் சேர்க்கப்படாததால், மூன்றாவது அலையில் குழந்தைகளுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து பல்வேறு வகையில் ஆராய்ந்து வருகிறது. அதேவேளையில், குழந்தைகளுக்கான கரோனா சிறப்பு வார்டுகளை தயார்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. மூன்றாவது அலை அக்டோபரில் உச்சம் தொட்டாலும் கூட  இரண்டாவது அலையைவிட பாதி அளவிலேயே தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் கணிக்கின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; மீண்டும் தொடங்கிய தடுப்பூசி உற்பத்தி!

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

covid infection increased again started covershield vaccination 

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைகள் கொரோனாவை தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவனம் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசியான கோவிட்ஷீல்டை உற்பத்தி செய்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்ததால் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசி உற்பத்தி செய்வதை நிறுத்தியது.

 

தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார். 


 

Next Story

அதிகரிக்கும் கொரோனா தொற்று; திருச்சியில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

covid infection increased trichy womens admitted government hospital

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் கொரோனாவை தடுப்பதற்கான தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

 

அதன் ஒரு பகுதியாக, திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர் நேரு தலைமையில் செயல்படும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் தற்போது 42 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 330 ஆக்ஸிஜன் கான்சன்ட்ரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன. 320 மருத்துவர்கள், 230 செவிலியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர். தற்போது திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தினமும் 300க்கும் அதிகமானோர் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

 

தற்போது இந்த சிகிச்சை மையத்திற்கு உள்ளேயே ஆர்டிபிசிஆர் சோதனை செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. போதுமான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. எனவே, திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்றை கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை. அதை எதிர்கொள்ள திருச்சி அரசு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது என்று மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அனைவரும் நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக டீன் நேரு கூறியுள்ளார்.