Skip to main content

காவேரி நதிநீர் பங்கீடு; கர்நாடக அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்! 

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

Cauvery River; OPS Condemnation Government of Karnataka

 

“காவேரி நதிப் படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து ஒரு முடிவு ஏற்படும் வரையில், தமிழ்நாட்டின் கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவேரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டுவோம்" என்று கர்நாடக அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கூறுவது காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணானது என்பதால், கர்நாடக அரசின் தன்னிச்சையான முடிவைக் கண்டித்து இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, இந்தத் திட்டத்திற்கு எந்தவிதமான தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

 

மேகதாது அணை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் கர்நாடக சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மட்டுமல்லாமல், காவேரி படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து ஒரு முடிவு ஏற்படும் வரையில், தமிழ்நாட்டின் கோதாவரி - கிருஷ்ணா பெண்ணாறு காவேரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் கர்நாடக சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கர்நாடக அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. கர்நாடக அரசின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


காவேரி படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து காவேரி நடுவர் மன்றம் 2007 ஆண்டே தனது இறுதித் தீர்ப்பினை வழங்கிவிட்டது. இதன்படி, 192 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா திறந்து விட வேண்டும். இந்தத் தீர்ப்பின்படி கேரள மாநிலத்திற்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீர்ப் பங்கீட்டின் அளவை 192 டி.எம்.சி. அடியிலிருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்தது. அதாவது 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டது. அதே சமயத்தில் கர்நாடகாவின் நீர்பங்கீடு அளவு 270 டி.எம்.சி.யிலிருந்து 284.75 டி.எம்.சி.யாக உயர்த்தப்பட்டது. கேரளா மற்றும் புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இதன்மூலம் காவேரி படுகை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் உரிய நீர்ப் பங்கீடு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.


இந்தச் சூழ்நிலையில், மறுபடியும் காவேரி நதிப் படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து ஒரு முடிவு ஏற்படும் வரையில், தமிழ்நாட்டின் கோதாவரி - கிருஷ்ணா - பெண்ணாறு - காவேரி - வைகை - குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற கர்நாடக சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவைத் தீர்மானத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான செயல் ஆகும். இது நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு எதிரான செயல்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாலியல் தொந்தரவு; பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Brajwal Revanna suraj revanna brother arrested

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி. ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை வாங்கித்தருவது தொடர்பாக அவரை அணுகிய போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஊழியர் அளித்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் பிரஜ்வல் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரது தந்தை ரேவண்ணா பெண் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரஜ் ரேவண்ணாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, 342, 506 இன் கீழ் ஹோலேநரசிபுரா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரஜ் ரேவண்ணா கடந்த 16 ஆம் தேதி (16.06.2024) ஹாசன் மாவட்டத்தில் உள்ள கன்னிகடா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்தாரர் கூறியுள்ளார். இந்த கைது சம்பவம் தொடர்பாக ஹாசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி. முகமது சுஜிதா கூறுகையில், "மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமேலவை உறுப்பினரும். எச்.டி ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்" என தெரிவித்துள்ளார். 

Next Story

கிரிவலம் முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய கர்நாடக பக்தர்கள் உயிரிழப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
devotees who returned to town after completing Girivalam lost their lives

திருவண்ணாமலை அணைக்கரை ரிங் ரோடு அருகில் கர்நாடகா பதிவெண்  கொண்ட காரில் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு பெங்களூர் நோக்கி சென்றனர். திருவண்ணாமலை அடுத்த நல்லவன் பாளையத்திலிருந்து கீழ்நாத்தூர் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் திருவண்ணாமலை நகருக்குள் சென்றனர். 

அணைக்கரை ரிங் ரோடு அருகே காரும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே, முருகன் வயது 36 தந்தை பெயர் ராஜமாணிக்கம், சே அகரம் செங்கம் தாலுக்கா, விஜயகாந்த் வயது 32 தந்தை பெயர் நாராயணன் கீழாத்தூர் ஆகிய இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

விபத்து நடந்தது நேற்று இரவு பௌர்ணமி கிரிவலம் என்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரத்துக்குள் வரும் 9 சாலைகளும் பெரும் சிரமத்தை சந்தித்தனர். விபத்தால் புறவழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அதற்குள் இருவரும் இறந்துவிட்டனர். இறந்த உடல்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மேற்கு காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர். விபத்து நடந்த உடன் காரில் இருந்த டிரைவர் தப்பி ஓடியிருந்தார். விபத்து நடத்திய காரின் ஓட்டுநர் யார்? அவர் எங்கே சென்றார் என்ற கோணத்தில் காவல் துறையினர் தேடி வருகின்றார்கள். காரின் உரிமையாளரை வரவைத்து விசாரணை நடத்துகின்றனர்.