Skip to main content

ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” - அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
All India Muslim Jamaat President says Every Muslim should welcome CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கிறார். இது தொடர்பாக, அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன். இதற்கு முன்பே இதனை செய்திருக்க வேண்டும். இந்த சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் இடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. இந்த சட்டத்தினால், இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதம் சார்ந்து அராஜகங்களை சந்திக்கும் இஸ்லாமியர் அல்லாதோர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் இதற்கு முன்பு எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால், இந்திய இஸ்லாமியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தச் சட்டம் எந்த இஸ்லாமியரின் குடியுரிமையையும் பறிக்கப் போவதில்லை. கடந்த ஆண்டுகளில், தவறான புரிதல்கள் காரணமாக, இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. சில அரசியல்வாதிகள், இஸ்லாமியர்கள் இடையே தவறான புரிதலை ஏற்படுத்தினார்கள். இந்தியாவின் ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

“20 கோடி மக்கள் முக்கியமில்லையா?” - பிரதமர் பேச்சுக்கு கபில் சிபல் காட்டம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, கங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி கபில் சிபல், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் காங்கிரஸ் கொடுப்பதாக பிரதமர் மோடி பேசுகிறார். இந்த நாட்டின் 20 கோடி மக்கள் முக்கியமில்லையா? அவர்களுக்கு ஆசைகள் இல்லையா?

அரசியல் இவ்வளவு நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. வரலாற்றில் இது நடந்ததில்லை. அப்படி நடக்க நான் விரும்பவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் அதைக் கண்டிக்க வேண்டும் மற்றும் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

“குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்” - ப.சிதம்பரம் திட்டவட்டம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
The Citizenship Amendment Act will be repealed says p Chidambaram

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.

பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020,  இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா,  கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.