Skip to main content

பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020
www

 

 

பொதுவாக அரசு அதிகாரிகள் பொதுமக்களை அணுகும் விதம் நாம் அறிந்ததே. தங்களது அதிகாரத்தை காண்பித்து மரியாதை இல்லாமல் பேசுவதும், அதுவும் படிக்காத ஏழை எளிய மக்கள், கிராமப் பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் ஏதாவது கோரிக்கையுடன் சென்றால் அவர்களுக்கு அதிகாரிகள் கொடுக்கும் மரியாதை எப்படி இருக்கும் என்பதும் நமக்கு தெரியும். 

 

கரோனா காலக்கட்டத்தில் இ.பாஸ் முதல் கரோனா சிகிச்சை வரை அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்களுக்கு கிடைத்தது, ஏழை எளியோருக்கு கிடைக்கவில்லை என்பது நாம் கண்கூடாக அறிந்ததே. இ.பாஸ் பிரச்சனையில் ஒரு மருத்துவருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம், கைகலப்பு நடந்தது. அரசு அதிகாரிகளுக்கு அது எளிமையாக கிடைக்கிறது. அதிகாரம் கையில் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் நாம் பார்த்த இன்னொரு சம்பவம் சாத்தான்குளம் சம்பவம். 

 

காவல்துறையினரும் அதிகாரம் படைத்தவர்கள். மக்களின் அத்தியாசியத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய இடத்தில் இருக்கும் அதிகாரிகளும் அதிகாரம் படைத்தவர்கள்தான். இந்த வகையில் லேட்டஸ்டாக காவல்துறையினருக்கும் மின்சாரத்துறையினருக்கும் அதிகாரப் போட்டி நடந்திருக்கிறது. 

 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கூமாபட்டி காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.‘ஒரு வாகனத்தில் மூன்று பேர் போகலாமா?’ எனக் கேட்டுள்ளனர். 

 

அப்போது சைமன் தரப்பு “நீங்க மட்டும் டிரங்கன் டிரைவ் கேஸ் போட்டு ஜி.எச்.சுக்கு கூட்டிட்டு போறப்ப ட்ரிபிள்ஸ்தானே போறீங்க? போலீசுக்கு மட்டும் தனிச்சட்டமா?” என்று பதிலுக்கு கேட்டுள்ளனர். இதனால் எரிச்சலான போலீசார், சைமனின் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, கூமாபட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு போய்விட்டனர்.

 

சைமனின் இருசக்கர வாகனத்தை போலீசார் பறித்த சம்பவம் மின்வாரிய ஊழியர்களுக்கு பரவியது. போலீஸ் பவரை எங்ககிட்டயே காட்டுறீங்களா?’ என்று கடுப்பான மின்வாரிய ஊழியர்கள், இதனை மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளனர். உயரதிகாரி ஒருவரின் ஒத்துழைப்போடு, கூமாபட்டி காவல்நிலையத்தின் மின் இணைப்பை துண்டித்தனர். அதனால், காவல்நிலையப் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், கூமாபட்டி காவல்துறையினர், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டுள்ளனர். அதன்பிறகு, இரண்டு மணி நேரம் கழித்தே, காவல்நிலையத்துக்கு மின் இணைப்பு தந்துள்ளனர்.

 

ஒரு சிலரை தவிர பொதுவாக காவல்துறையில் இருப்பவர்கள் பொதுமக்களை எவ்வாறு நடத்துவார்கள் என்பது நமக்கு தெரியும். அதேபோல மின்சாரத்துறை ஊழியர்கள் எவ்வாறு அணுகுவார்கள் என்பதும் தெரியும். ஒரு வேலைக்காக நாம் சென்றால் காக்க வைப்பதும், சின்ன சின்ன வேலைகளுக்கு பணம் கேட்பதும் தெரிந்ததுதான். இப்போது இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் நடந்ததால், அதிகாரம் கையில் இருப்பதால் ஒருவருக்கொருவர் நீயா, நானா என எகிறியிருக்கின்றனர். தங்களுக்கு ஒரு அவமதிப்பு என்றவுடன் தங்கள் கையில் இருக்கும் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தும் இவர்கள் பொதுமக்களுக்கு என்றால் தக்காளி சட்னியைப் போலவும், இவர்களுக்கு வந்தால் ரத்தம் போலவும் நடந்து கொள்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; 2 பேர் உயிரிழப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
manipur Churachandpur District sp office incident

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையைத் தொடர்ந்து பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். ஓரளவுக்கு அங்கு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும், இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் தொடர்ந்தபடியே தான் இருக்கின்றன.

இந்நிலையில் மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சியாம் லால் என்பவர் கடந்த 14 ஆம் தேதி ஆயுதம் தாங்கிய குழுவினருடன் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சியாம் லால் பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து குக்கி சமூகத்தினர் சுராசந்த்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி காவல் நிலையத்தை சூறையாடினர்.

அப்போது கூட்டத்தை கலைக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.