Skip to main content

பிறந்த குழந்தை மற்றும் 3 வயது கைக்குழந்தையுடன் மருத்துவமனை ஷெட்டில் 20 நாளாக கணவருக்காக காத்திருக்கும் தாய்! ஃப்ளக்ஸ் பேனரில் தூங்கும் துயரம்

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

Pudukkottai hospital

 

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் 3 வயது பெண் குழந்தையுடன் வந்து பிரசவத்திற்காகச் சேர்ந்துகொள்கிறார். அவருக்கு துணையாக உறவினர்கள் யாரும் வரவில்லை. அருகில் உள்ளவர்கள் அந்தக் கர்ப்பிணியின் நிலை அறிந்து சிறு சிறு உதவிகள் செய்கிறார்கள். அந்த உதவி அவருக்குப் பெரிதாக இருந்தது. மருத்துவமனையில் கொடுக்கும் உணவை தனக்கும் தன் 3 வயது குழந்தைக்கும் கொடுத்து பசியாறிக் கொள்கிறார்.

 

சில நாட்களில் சுகப்பிரசவம் நடந்து அழகான ஆண்குழந்தை பிறந்தது. அடுத்த 3 நாட்களில் மருத்துவமனை பெட்டிலிருந்து வெளியே வருகிறார். சொந்த ஊருக்கு போனால் என்ன சொல்வார்களோ என்ற சந்தேகம் அவரை அடுத்த அடி எடுத்து வைக்கவிடவில்லை. ஒரு கையில் பிறந்த குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு மறு கையில் தன் 3 வயது பெண் குழந்தையுமாக வார்டைவிட்டு வெளியே வந்த அந்தப் பெண், பார்வையாள்கள் தங்கும் ஷெட்டில் தனது சேலையால் ஒரு தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறார். மற்றவர்களைப் பார்க்க வருபவர்கள் கொடுப்பதை உண்டு அதே ஷெட்டில் இரவு, பகல், வெயில், மழை அனைத்தையும் சமாளித்துக் கொண்டு தங்கிவிட்டார். 

 

அடுத்து தன் குழந்தையைப் படுக்க வைக்க பாய், துணிகள் இல்லை. அந்தப் பகுதியில் ஒரு கடை விளம்பரப் பதாகை கிடக்க, அவற்றை எடுத்துவந்து தரையில் விரித்து பிறந்த குழந்தையைப் படுக்க வைத்திருக்கிறார். இதைப் பார்த்த ஒரு சமூக சேவகி உணவு மற்றும் சிறு உதவிகளைச் செய்து வருகிறார். குளிர், கொசுக்கடியை மூவரும்  ஏற்கிறார்கள்.

 

இந்தப் பெண் குறித்து நம்மிடம் பேசிய சமூக சேவகி டெஸ்சி ராணி, பொன்னமராவதி பனையப்பட்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. கணவருக்கும் தீராத நோய். அவரும் இறந்துவிட்ட நிலையில், தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தபோது இந்தப் பெண்ணைப் பற்றி நன்கு அறிந்த ஒரு இளைஞர் மறுவாழ்வு கொடுக்கிறார். அதை அந்தப் புதிய கணவரின் அம்மா உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அவர் இந்தப் பெண்ணை முழுமையாக ஏற்றுக் கொண்டாலும் தாய் மற்றும் உறவுகளையும் உதற முடியவில்லை. இந்த நிலையில் அவர் மின்வாரிய ஒப்பந்தப் பணியளராக வேலைக்குப் போன நிலையில் இந்தப் பெண்ணை மிரட்டி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தன் மகனுக்கும் சம்மந்தமில்லை என்று எழுதி வாங்கிக் கொண்டு மிரட்டி வெளியேற்றி விடுகிறார்கள் மாமியார் மற்றும் அவரது உறவினர்கள். 

 

அதன் பிறகு எங்கே போவது என்று நினைத்தவர், மருத்துவமனைக்கு வந்து தஞ்சமடைந்துள்ளார். குழந்தை பிறந்த தகவல் அறிந்து தன் கணவர் வருவார், வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையோடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஷெட்டில் தங்கி உள்ளார் என்றார்.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு நாம் தகவல் தெரிவித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அவரது கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.