Skip to main content

‘ஏரி தூர்வாரல்' என்ற பெயரில் சுரங்கம் தோண்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!!

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

Villupuram District Lake issue

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஏரியிலிருந்து அளவுக்கதிகமாக மண்ணெடுத்து நெடுஞ்சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 


திண்டிவனம் அருகே உள்ளது பட்டணம் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும் பாலானோர் விவசாயத்தை நம்பியே தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அதேபோல் இங்கு உள்ள விவசாய பெருமக்கள் இப்பகுதியில் உள்ள சுமார் 173 ஏக்கர் பரப்பளவு உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரியில் மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் மழை நீரினால் ஏரி பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியில் கடந்த 22 ஆம் தேதியிலிருந்து சுமார் தினசரி 100க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் 5 யூனிட் அளவில் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த மண் திண்டிவனம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மண் எடுக்கும் பகுதிக்கு சென்று அவர்களிடம் கேட்டதற்கு தாங்கள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில்தான் மண் அள்ளுவதாக தெரிவித்தனர். அதேபோல் அதற்குரிய ஆவணங்களும் எங்களிடம் உள்ளது என கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் கொடுத்த ஒப்புதல் அறிக்கையில், இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் இந்த ஏரியை தூர்வாருவதற்காக கோரிக்கை வைத்ததாகவும், அதன் அடிப்படையில் இந்த ஏரியில் மண் எடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

Villupuram District Lake issue


ஆனால் பொதுமக்கள் தரப்பில் யாரும் கோரிக்கை வைத்ததாக தெரியவில்லை. அதற்குரிய கோரிக்கை மனுவும் வழங்கப்படவில்லை. மேலும் அதில் ஒரு மீட்டர் அளவிற்கு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அந்த மண் எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த எந்தவித வாசகமும் இடம் பெறவில்லை. ஏரியில் சுற்றுப்பகுதி முழுவதும் ஒரு மீட்டர் அளவில் ஆழப்படுத்தி அந்த மண்ணைக் கொண்டு ஏரி கரையை பலப்படுத்தினால் மட்டுமே நீர் ஆதாரத்தை பெருக்கி அந்த நீரைக் கொண்டு அப்பகுதி விவசாயிகள் பயன்பெற முடியும்.

அதைவிடுத்து ஏரியின் மையப்பகுதியில் சுமார் மூன்று மீட்டர் அளவிற்கு ஆழப்படுத்தப்பட்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பட்டணம் ஏரியில் மண் எடுப்பது சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரித்தேன். அதற்கு அவர் அரசு அனுமதியோடுதான் மண் எடுப்பதாக கூறுகிறார். ஆனால் மண் தோண்டுபவர்கள் அவர்கள் வைத்திருக்கும் அந்த அனுமதி உத்தரவை இந்த மண் இதற்காக எடுக்கப்படுகிறது, எங்கே கொண்டு செல்லப்படுகிறது எத்தனை ரோடு முன்னெடுக்கப்படும் இப்படி எந்த விபரமும் இல்லை.

 

Villupuram District Lake issue



மேலும் ஏரி என்று இருந்தால் அதில் உள்ள வண்டல் மண் மட்டும்தான் எடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் சுரங்கம் போல தோண்டுகிறார்கள். இது பிற்காலத்தில் மிகப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும். காரணம் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் பட்டணம் ஏரியில் 100 நாள் வேலை திட்டத்தின்படி ஊர் மக்கள் வேலை செய்தார்கள். அப்போதே கண்டபடி மண் தோண்டி ஆங்காங்கே மிக ஆழமான பள்ளங்கள் இருந்ததால் 100 நாள் வேலை செய்தவர்கள் மீது ஏரி மண் சரிந்து அதில் நாலு பேர் இறந்து போனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதிகாரிகள் இந்த ஏரியில் மண் எடுத்து சம்பந்தமாக நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். மண்ணெடுத்த பகுதிகளை சமப்படுத்த வேண்டும் கரையை பலப்படுத்த வேண்டும் என்கிறார், இந்த ஏரியின் மூலம் பாசனம் பெறும் விவசாயி.


ஊரல் கிராமத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அண்ணாதுரை, எடுக்கப்பட்ட பள்ளத்தில் மழைக்காலங்களில் தேக்கி நிற்கும் நீரில் அப்பகுதி சிறுவர்கள் ஆழம் தெரியாமல் அதில் இறங்கி குளிக்கும்பொழுது உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. அதேபோல் பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழை நீர்  வெளியேற வழியின்றி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே வருடங்கள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏரியில் மண் எடுக்கப்படும் சம்பவத்தால் விளைநிலங்கள் நீரின்றி கருகும் அபாயம் உள்ளது.

 

 

Villupuram District Lake issue



ஆகவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட ஏரி பகுதியில் ஆய்வு செய்து சரியான முறையில் மண் எடுக்கப்படுகிறதா என்றும் அதேபோல் அரசு அனுமதி வழங்கிய 500 லாரிகள் மட்டுமே எடுத்துச்செல்லப்படுகிறதா? என்றும் அதிக அளவில் மண் கொள்ளையடிக்கப்படுகிறதா? என்று ஆட்சியர் ஆய்வு செய்து, அதிகளவில் கொள்ளையடிக்கபடுபவை தடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார். பட்டணம் ஏரியில் வரைமுறையற்ற அளவில் சுரங்கம் போன்று மண்ணெடுப்பது சம்பந்தமாக செய்திகள் வெளியானதை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மண் எடுக்கப்படும்  இடத்திற்கு நேரில் சென்று  விசாரணை மேற்கொண்டனர். அப்போது  ஏரிப் பகுதியில் கீழே உள்ள கெட்டியான மண் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அதிகாரிகளோ மேற்பரப்பிலுள்ள பயனற்ற மண்ணை அவர்கள் வெட்டிய குழியில் கோட்டி சமன்செய்து ஒரு மீட்டர் அளவில் உள்ளதுபோல் வைத்து அதனை புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்பும்படி கூறிச் சென்றதாக தெரிகிறது. இந்த ஏரி மண் எடுக்கப்படுவதில் அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

nakkheeran app




ஏரி தூர்வாரல் என்ற பெயரில் சுரங்கம் தோண்டப்படுகிறது. பொதுவாக பொதுப்பணித்துறை ஏரிகளில் குறிப்பிட்ட அளவிற்கு படிந்துள்ள வண்டல் மண்ணை அந்தந்த பகுதி விவசாயிகள் எடுத்துச்சென்று நிலத்திற்கு அதை உரமாக பயன்படுத்துவார்கள். இதன்மூலம் ஏரி தூர்வாரப்படும் அந்த ஏரிகள் மூலம் நீர் நிரம்பி பாசனம் பெறும் விவசாயநிலங்கள் வண்டல் மண் நிரப்பப்படுவதன் மூலம் மண் வளம் பெருகி விவசாய மகசூல் அதிகரிக்கும். இதுதான் காலம்காலமாக நடைமுறையில் உள்ள பயன்பாடுகள். ஆனால் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு ஏரிகளில் ஏற்கனவே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டபோது தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த பல்வேறு ஏரி குளங்ளில் இதேபோன்று அளவுக்கதிகமாக மண்ணை தோண்டி எடுத்து சாலைக்கு பயன்படுத்தினார்கள். அந்த ஏரிகளில் ஏற்பட்ட அளவுக்கதிகமான மேடு பள்ளங்களை சமன் செய்யாததால் இதனால் மழைக்காலங்களில் ஏரி குளங்களில் நீர் நிரம்பி குளிக்கச் செல்லும் பள்ளி, கல்லூரி இளைஞர்கள் பெண்கள் என பல பேர் அவ்வப்போது நீரின் ஆழம் தெரியாமல் இறங்கிக் குளிக்கும்போது  மூழ்கி இறந்து போகிறார்கள். 

 

Villupuram District Lake issue



இது விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் சம்பவங்களாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் பட்டணம் கிராமத்தின் பாசன ஏரியில் அளவுக்கு அதிகமாக சுரங்கம் தோண்டி அக்கிராம மக்களை ஆபத்தில் சிக்க வைக்கப் போகிறார்கள். மேலும் ஏரியை அளவுக்கதிகமாக தோண்டுவதால் மழைக்காலங்களில் அதிக நீர் வரத்து வரும் அப்படி வரும் நீரை தேங்கி நிற்கும் அளவிற்கு கரை பலம் இல்லாததால் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறும் நிலையும் உள்ளது. இப்படிப்பட்ட எதார்த்த நிலைமைகளை உணராமல் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான போக்கினால் ஏரிகளை மராமத்து செய்கிறேன் என்ற பெயரில் சுரங்கம் தோண்டி கிராம மக்களை அதில் சாகடிக்க போகிறார்கள் என்கிறார்கள். ஏரி தூர்வாரி நீரம்பி அதன் மூலம் விவசாயம் செழிக்க வேண்டும். அப்போதான் விவசாயிகளால் வாழ முடியும்  அவர்கள் உழைத்து  உணவு அளித்தால்தான் நகர மக்களும் வாழமுடியும்.   எனவே பொதுப்பணித்துறை ஏரிகளை தூர்வாரும் பணியில் முறையான அளவில் ஏரி தூர்வாரும்போது அதன் கரைகளையும்  பலப்படுத்த வேண்டும்  என்கிறார்கள் பட்டணம் கிராம மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.