Skip to main content

திமுகவிடம் பாஜக வைத்த வேண்டுகோள்...உதயநிதியை நிறுத்தி ரிஸ்க் எடுக்கணுமா... அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

எம்.பியானதால் வசந்தகுமார் ராஜினாமா செய்த நாங்குநேரி சட்ட மன்றத் தொகுதி, ராதாமணி எம்.எல்.ஏ மரணத்தால் காலியான விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல்கள், மாநிலம் முழுவதும் நடக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் எது முதலில் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகுவிடம் சமீபத்தில் விவாதித்திருக்கிறார்கள் தலைமை தேர்தல் ஆணைய டெல்லி அதிகாரிகள். அப்போது, நீதிமன்றம் கண்டித்தாலும்கூட, உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடவே அரசு விரும்புகிறது. அதனால் இடைத்தேர்தலை எப்போது நடத்த ஆணையம் தீர்மானிக்கிறதோ அப்போது நடத்தட்டும் என்கிற அரசின் விருப்பத்தை டெல்லிக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்தே, இடைத்தேர்தலின் தேதி குறிக்கப்பட்டது என்கிறார்கள் தேர்தல் ஆணைய தரப்பினர்.

 

dmk



தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிவிட்டு, விக்கிரவாண்டியில் தி.மு.க. போட்டியிடுவது என ஸ்டாலின் எடுத்த முடிவு, காங்கிரசாருக்கு ஆச்சரியம்தான். அதனால் அரசியல் களத்தில் பலவித யூகங்கள் வெளிப்படுகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, "நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என நெல்லை மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் எழுதி மீடியாக்களுக்கு தந்ததால், மேலிடம் நடவடிக்கை எடுக்குமளவு நிலைமை இருந்தது. அ.தி.மு.க.வை எதிர்க்க தி.மு.க.தான் சரி என்பதே ஸ்டாலின் நிலைப்பாடாக இருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ஜ.க., நாங்குநேரியில் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. அப்படி இருந்தால், தி.மு.க.வை எதிர்ப்பது பா.ஜ.க.வுக்கு கஷ்டம், காங்கிரஸ் என்றால் ஜெயிக்கலாம் என நினைத்து, நாங்குநேரியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்துவிடுங்கள் என தி.மு.க.விடம் பா.ஜ.க. வேண்டுகோள் வைத்திருக்க வாய்ப்புண்டு. பா.ஜ.க.வுக்கு ஒதுக்காமல் அ.தி.மு.க.வே போட்டியிடும் பட்சத்தில், அ.தி.மு.க.வின் வெற்றிக்காக எடப்பாடி பழனிச்சாமியும் அதே பாணியில் தி.மு.க.விடம் கோரிக்கை வைத்திருக்கலாம்'' என்கிறார் யூகமாக.
 

dmk



இடைத்தேர்தலை எதிர் கொள்வது குறித்து எடப்பாடியின் ஆதரவாளர்களான அ.தி.மு.க.வின் சீனியர்கள் சிலரிடம் பேச்சு கொடுத்தபோது, "நாடார் சமூக பிரமுகர்கள் பலருக்கும் பல உயரிய பதவிகள் கொடுத்து கௌரவித் திருக்கிறது பா.ஜ.க. தலைமை. அதனால், காங்கிரசை ஆதரித்து நின்ற நாடார் சமூகம், தற்போது பா.ஜ.க.வை ஆதரிக்கிறது. இதனைச் சொல்லியே நாங்குநேரியை தங்களுக்கு ஒதுக்குமாறு ஓ.பி.எஸ். சிடம் கேட்டிருக்கிறது பா.ஜ.க. இதனை எடப்பாடியிடம் ஓ.பி.எஸ். சொல்ல, நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. நம்முடன் கூட்டணி வைக்கும் போதே, இடைத் தேர்தல் தொகுதிகளை பா.ஜ.க. கேட்கக் கூடாது என்கிற நமது நிபந்தனையை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனடிப்படையில்தான் 22 தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் சீட் கேட்டு பா.ஜ.க. நெருக்கடி தரவில்லை. இப்போது நாங்குநேரியை விட்டுக்கொடுக்கச் சொல்வது சரியல்ல ’ என சொல்லியுள்ளார். இந்த நிலையில், இரண்டு தொகுதிகளிலும் தனது ஆதரவாளரை நிறுத்த நினைக்கிறார் எடப்பாடி. ஆனால், இதற்கு ஓ.பி.எஸ். சம்மதிக்கவில்லை. அதே சமயம், தனது குடும்பத்தினருக்காக விக்கிரவாண்டியை கேட்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். இரு தொகுதிகளிலும் சீட் கேட்டு கட்சியின் வி.வி.ஐ.பி.கள் பலரும் மல்லுக்கட்டியதால் வேட்பாளரை முடிவு செய்வதில் ஏகத்துக்கும் நெருக்கடியை சந்தித்தார் எடப்பாடி'' என்கின்றனர்.

 

dmk



வேட்பாளர் தேர்வில் உளவுத்துறையின் உதவியை நாடியிருந்தார் எடப்பாடி. இரு தொகுதிக்கும் அவர் குறித்துக் கொடுத்த தலா 4 வேட்பாளரை பற்றிய செல்வாக்கு நிலவரங்களை தந்தது உளவுத்துறை. அவர்கள் தரப்பில் நாம் பேசியபோது, "தேர்தலில் வெற்றிபெற கூட்டணி வலிமை ஒருபுறமிருந்தாலும் வாக்குகளை பர்ச்சேஸ் செய்வதில்தான் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி ஆட்சிக்கு எந்த வகையிலும் சிக்கலை ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், எடப்பாடியின் இமேஜைக் காப்பாற்ற இரு தொகுதிகளின் வெற்றி அ.தி.மு.க.வுக்கு தேவைப்படுகிறது. இதனை செய்தால்தான் அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலை துணிச்சலாக எதிர்கொள்ளவும் முடியும். அதற்காகத்தான் எடப்பாடிக்கு வெற்றி அவசியமாகிறது.


தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் வாக்காளர்களை பர்ச்சேஸ் செய்ய முடிவு செய்திருக்கிறது ஆளுந்தரப்பு. நாங்குநேரியில் 2 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்களும், விக்கிரவாண்டியில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 வாக்காளர்களும் இருக்கின்றனர். இந்த இரண்டு தொகுதிகளிலுமே சராசரியாக தலா 1 லட்சம் வாக்குகளை குறிவைக்கிறது அ.தி.மு.க. தலைமை. ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் என 30சி பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. இது தவிர, தோழமைக் கட்சிகள், உதிரிக் கட்சிகள், தி.மு.க.வின் அதிருப்தியாளர்கள், சமூக அமைப்புகள், சாதி சங்கங்களுக்கென தனியாக 10 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வாய்ப்புக் கிடைக்கும் வேட்பாளர் தனியாக பெருந்தொகை செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும் என ஆலோசித்துள்ளனர். மேலும், ஒரு அமைச்சரின் கட்டுப்பாட்டில் 8 ஆயிரம் வாக்குகள் பிரித்து தரப்படவிருக்கிறது. ஒவ்வொரு அமைச்சரின் கீழ் எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட குழுவும் அமைக்கப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பதிலிருந்து பணப்பட்டுவாடா செய்வது வரை தனித்தனி குழுக்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன'' என அ.தி.மு.க.வின் வியூகங்களை விவரிக்கின்றனர்.

எதிர்க்கட்சியான தி.மு.க.வும் வெற்றியை குறிவைத்து களமிறங்கியுள்ளது. அறிவாலயம் தரப்பில் விசாரித்தபோது, "இரு தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றாலும் ஆட்சி மாற்றம் வரப்போவதில்லை என்பதால்தான் நாங்குநேரியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து டெஸ்ட் வைத்துள்ளோம். முடிவுகள் எப்படி வந்தாலும் எங்களுக்கு சாதகம்தான். காங்கிரஸ் வெற்றிபெற்றால் கூட்டணியின் வலிமை என சொல்லிக்கொள்ளலாம். தோல்வியடைந்தால் உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த இடங்களை அவர்களுக்கு கொடுத்து ஏற்க வைப்போம். மறுத்தால் காங்கிரசை கூட்டணியிலிருந்து வெளியேற்றுவோம்.

விக்கிரவாண்டியை பொன்முடியின் பொறுப்பில் கொடுக்கவிருக்கிறது தலைமை. உதயநிதியை போட்டியிட வைத்து ஜெயிக்க வைக்க வேண்டும் என விரும்பினார் பொன்முடி. இது குறித்து ஸ்டாலினிடம் பொன்முடி பேசிய நிலையில், தனது மகன் சிகாமணியை உதயநிதியிடம் விவாதிக்க வைத்தார். ஆனால், இடைத்தேர்தலில் உதயநிதியை நிறுத்தி ரிஸ்க் எடுக்க வேண்டுமா? என ஓ.எம்.ஜி. குரூப்பும் கட்சியின் சீனியர்களும் ஸ்டாலினிடம் சொல்லியுள்ளனர்.

இந்த நிலையில், எடப்பாடியின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என மக்களே தீர்ப்பளித்திருக்கின்றனர் என்பதை நிரூபிக்க விக்கிரவாண்டியின் வெற்றி ஸ்டாலினுக்கு அவசியமாக இருக்கிறது. இதன் மூலம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியும் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்கிற இமேஜும் கிடைக்கும் எனவும் தலைமை யோசித்துள்ளது. அதனால், ஆட்சியாளர்களின் பண விநியோகத்தை தடுப்பது ஒரு புறமெனில், அ.தி.மு.க.வின் பணப்பட்டுவாடாவை மேட்ச் செய்யும் வகையில் ஒரு ஓட்டுக்கு அதிகபட்சம் 2000 ரூபாய் என்கிற அளவில் 20சி பட்ஜெட்டை போட திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கேற்ற வகையிலேயே வேட்பாளர் நிறுத்தப்படுவார். வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதி என்பதால் அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ம.க.வின் வாக்குகளை எதிர்கொள்ளும் வகையில் வன்னியருக்கு வாய்ப்பளிக்கவும் ஆலோசனை நடந்தது. ஆனால், வன்னியர் என்றில்லை; தலைமை யாரை நிறுத்துகிறதோ அவரை ஜெயிக்க வைக்கிறேன் என சொல்லியிருக்கிறார் பொன்முடி. மேலும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வி லுள்ள 65 மாவட்ட நிர்வாகிகள் என அனைவரையும் தொகுதிக்குள் களமிறக்க வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன'' என்று விவரித்தனர்.

அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளுக்கு அதன் தோழமைக் கட்சிகளின் ஆதரவு கிடைத்திருக்கும் நிலையில், தினகரனின் அ.ம.மு.க.வும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. இதனால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கு மிடையே போட்டி அதிகரித்துள்ளது. இந்த வலிமையான போட்டியை எதிர்கொள்ள களத்தில் குதிக்கிறது சீமானின் நாம் தமிழர் கட்சி. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் ரிலீஸானதும் சூடு பிடிக்க விருக்கிறது தேர்தல் களம்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரமாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்ப பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.