Skip to main content

"என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்" - மாதவன்

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

madhavan about chandrayan 3

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய சந்திரயான் - 3 விண்கலம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம் - 3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. அதனைத் தொடர்ந்து பூமியின் நீள்வட்டப் பாதையைச் சுற்றி வந்த சந்திரயான் - 3 பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றுள்ளது.

 

இதையடுத்து ஏற்கனவே அனுப்பப்பட்ட சந்திரயான் - 2 ஆர்பிட்டரோடு, சந்திரயான் - 3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாகத் தகவல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரை தொடர்பு கொள்ள வழி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலமாக ரோவரிடம் இருந்து பெறும் தகவல்களை லேண்டர் இஸ்ரோவிற்கு அனுப்பும். சந்திரயான் - 2 திட்டத்தில் லேண்டரை தரையிறக்கும் திட்டம் தோல்வி அடைந்தாலும் கடந்த 4 ஆண்டுகளாக சந்திரயான் - 2 ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் திட்டப்படி இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும். நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. லேண்டரை தரையிறக்குவதற்கான அனைத்து கணினிகளும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது என இஸ்ரோ அறிவித்திருந்தது.

 

லேண்டர் நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய 45 நிமிடங்களுக்குள் ரோவர் வெளியே வந்து ஆய்வைத் தொடங்கும் பட்சத்தில் இந்த திட்டம் வெற்றி எனக் கருதப்படுகிறது. தொடர்ந்து 14 நாட்களுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். மேலும் சந்திரயான் - 3 தரையிறங்கும் காட்சிகளை நேரலையில் பார்ப்பதற்காக இன்று மாலை 5.20 மணியிலிருந்து தேசிய தொலைக்காட்சியான டிடி நேஷனல் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் சந்திரயான் - 3 விண்கலம் தரையிறங்கும் காட்சிகள் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் நடிகர் மாதவன் தனது எக்ஸ் பக்கத்தில், "என் வார்த்தையை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சந்திரயான் 3 நிச்சயம் வெற்றி பெறும். நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறேன். அற்புதமான வெற்றியை பெறப்போகும் இஸ்ரோவுக்கும், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கும் எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மாதவன் நடித்து இயக்கி கடந்த ஆண்டு வெளியான படம் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு'. இப்படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விஞ்ஞானிகளுக்கு வழக்கறிஞர்கள் சங்கம் பாராட்டு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Lawyers' Association praises  isro scientists in Delhi

 

உலகிற்குத் தமிழால் பெருமை சேர்த்த தமிழ் விஞ்ஞானிகள், வீரமுத்து வேல் (திட்ட இயக்குநர் சந்திரயான் மூன்று விண்கலம்) மற்றும் நிகர் ஷாஜி (திட்ட இயக்குநர் ஆதித்யா எல் 1 விண்கலம்) ஆகியோர் இன்று தில்லி சென்றனர். அவர்களை டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராம் சங்கர் ராஜா நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 

தமிழ் உலகம் மட்டுமல்லாமல் விண்ணுலகமும் போற்றும் இடத்தில் தமிழ் விஞ்ஞானிகள் இருவரும் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளதாக ராம் சங்கர் வெகுவாகப் பாராட்டினார். இந்திய அரசின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மிகப்பெரிய இயக்குநர் பொறுப்பில் இருக்கும் இந்த இருவரும் தமிழர்கள். சந்திரனுக்கு அனுப்பப்பட்ட ‘சந்திரயான் - 3’ என்ற விண்கலமும் சூரியனுக்கு அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல் -1’ என்ற விண்கலமும் உருவாக, நடைமுறைப்படுத்த, வெற்றிகரமாக விண்ணில் செலுத்த அமைக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவிற்கு இவர்கள் இருவரும் இயக்குநர்கள் ஆவார்கள். 

 

வீர முத்துவேல் என்ற விஞ்ஞானி தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். விஞ்ஞானி நிகர் ஷாஜி தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இருவரும் உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல உலகில் உள்ள அத்தனை தமிழர்களுக்கும் பெருமை. இந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய அரசு நிறுவனம். விண்வெளி ஆராய்ச்சியில் உலக அளவில் நாம் இப்போது முன்னிலை பெற்றுள்ளதற்கு இவர்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது. சந்திரயான் மற்றும் ஆதித்யா விண்கலங்கள் இந்தியாவையும் இந்தியப் பொருளாதாரத்தையும், முதலீட்டையும் அதிகரிக்கும் என்றும் வருங்காலத்தில் அதிக பலன்கள் தரும் என்றும் இருவரும் கூறினர்.

 

உலக நாடுகள் இந்தியாவின் இந்த இரண்டு சாதனைகளை உற்று நோக்கிப் பார்த்து வருவதாகவும் நமது விஞ்ஞானிகளின் அறிவுத்திறனைக் கண்டு வியப்பதாகவும் கூறினார்கள். சந்திரயான் திட்ட இயக்குநர் வீரமுத்து வேல் சந்திரனுக்கு சென்றுள்ள விண்கலம் ‘சந்திரயான் - 3’  நிலவின் மண் மற்றும் இதர கனிம வளங்களை ஆராய்ந்து எதிர்காலத்தில் நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வழங்கும் என்று கூறினார். அதேபோல் சூரியனுக்கு சென்றுள்ள ‘ஆதித்யா எல் -1’ விண்கலம் சூரியனின் வட்டப் பாதைகளை ஆராய்ந்து, அதன் கதிர்வீச்சுகளை ஆய்வு செய்து உலக வெப்ப மயமாதல் போன்றவற்றை ஆராய்ந்து சொல்லும் என்று கூறினார். 

 

தமிழகத்தின் இரண்டு தலைசிறந்த விஞ்ஞானிகள் நீடுழி வாழவும் இன்னும் பல்வேறு சாதனைகள் செய்யவும் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக மேலும் மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதாகச் சொல்லி நேரில் சென்று டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ராம் சங்கர் பாராட்டினார். அவருடன் டெல்லி தமிழ்ச் சங்க செயலாளர் முகுந்தன் அவர்களும் கலந்து கொண்டு அவர்களை டெல்லி தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வாழ்த்தினார். 

 

 

Next Story

“இந்திய விண்வெளித் துறையில் பல்வேறு திட்டங்கள் செய்யப்படவுள்ளது” - சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

Chandrayaan 3 Project Director veeramuthuvel says about scientific research

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட்  23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வந்தது.

 

ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கலத் திட்டத்தின் திட்ட இயக்குநரான வீரமுத்துவேலுவை பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டியும், கெளவரவித்தும் வருகின்றனர். அந்த வகையில், இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பயின்ற சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஞ்ஞானி வீரமுத்துவேல் கூறியதாவது, “சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி தனிப்பட்ட ஒரு நபரின் வெற்றி மட்டுமல்ல. ஒரு குழுவாக இணைந்து பல்வேறு தோல்விகளை எதிர்கொண்டு விடாமுயற்சியுடன் மேற்கொண்டோம். அந்த முயற்சியின் தொடர் நடவடிக்கையால் தான் இந்த வெற்றியை பெற முடிந்தது. எனவே, மாணவர்கள் விடாமுயற்சியுடன் உழைக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்.

 

அரசு வேலைகளிலும் அறிவியல் ஆய்வுகளிலும் தென்னிந்தியர்களை விட வட இந்தியர்கள் தான் அதிக அளவில் இருக்கின்றனர். வட இந்தியர்கள் தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டு முயற்சி செய்து வெற்றி பெறுகிறார்கள். ஆனால், தென்னிந்திய மக்களை பொறுத்தவரை ஒரு முறை அல்லது இரண்டு முறை தோல்வி அடைந்தால் தொடர்ந்து முயற்சி செய்யாமல் வேறு துறைக்கு செல்கின்றனர். தோல்வி அடைந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெறலாம். அதை தென்னிந்தியர்களும் செய்ய வேண்டும். இந்தியாவில் விண்வெளித் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ளது. நிலாவுக்கு மனிதர்களை அனுப்புவது உட்பட ஏராளமான திட்டங்களை வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.