Skip to main content

'அருணகிரி நாதர் நாக்கில் முருகன் செய்த அதிசயம்' - திருப்புகழ் பாடலுக்கு பின்னுள்ள திகைப்பூட்டும் சம்பவம்

Published on 25/03/2022 | Edited on 25/03/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அருணகிரி நாதர் குறித்தும் திருப்புகழ் குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

தமிழ்நாட்டில் பன்னிரு ஆழ்வார்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடினார்கள். பன்னிரு திருமுறைகள் தொகுக்கப்பட்டது. அவை தமிழ்நாட்டின் கருவூலமாக பார்க்கப்பட்டன. தமிழகம் முழுவதும் கால்நோக நடந்து திருத்தலங்கள் தோறும் யாத்திரை செய்து முருகனை ஆராதித்தார் அருணகிரி நாதர். தன்னுடைய இளம் வயதில் காமசேட்டைகளை இடையறாது செய்தவர் அருணகிரி நாதர். அவருடைய செயல்களால் அவரது குடும்பத்தினர் வருந்தாத நாட்களே இல்லை. ஒருநாள் ஒரு பெண்ணோடு அவசர அவசரமாக வீட்டிற்கு வந்தபோது, ஏன் இப்படி ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறாய், இப்படி எல்லா பெண்களையும் பெண்டாளா நினைக்கிறீயே சண்டாளா என்று அவர் தமக்கை திட்டுகிறார்.

 

பெண்டாளுவதுதான் வாழ்க்கையின் பெருநோக்கம் என்று நீ நினைத்தால் என்னையும் வைத்துக்கொள் என்று அவர் திட்டியதும் அருணகிரி நாதருக்கு குற்ற உணர்ச்சி மேலோங்கியது. என் தமக்கை இப்படி பேசும்படி நடந்துகொண்டேனா, தமக்கை இப்படி கேட்ட பிறகு உயிர் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று நினைத்த அருணகிரி நாதர், திருவண்ணாமலையின் மலையுச்சிக்கு ஏறுகிறார். முருகா என்று அழைத்து மலையுச்சியில் இருந்து கீழே குதித்துவிடுகிறார். 

 

கண்கண்ட கடவுளான முருகன், அருணகிரி நாதரை காப்பாற்றிவிடுகிறார். ஏன் தற்கொலை முடிவுக்கு வந்தாய் என முருகன் கேட்க, நடந்ததை விளக்கிச் சொல்கிறார் அருணகிரி நாதர். நீ என்னைப் பற்றி பாடு என்கிறார் முருகன். அதற்கு அருணகிரி நாதர், 'பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம்தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன்' என்கிறார். உடனே முருகன், உன் நாக்கை நீட்டு என்கிறார். அருணகிரி நாதர் நாக்கை நீட்டியவுடன் அதில் ஓம் என்ற மந்திரத்தை எழுதுகிறார். எழுதிய மாத்திரத்தில் அருணகிரி நாதர் வாய் கவிதை மழைபோல பொழிய ஆரம்பித்தது. பின், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருச்செந்தூர், திருத்தணி உட்பட சமயக்குறவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சென்று அவர் முருகனைப் பாடினார். அந்தப் பாடலுக்கு திருப்புகழ் என்று பெயர்.  


"முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே"

 

என்று அவர் பாடிய பாடல் இன்றைக்கும் உயிர்பெற்று உலாவருகிறது. இந்தப் பாட்டை கர்நாடக சங்கீத கச்சேரி மேடைகளில் கேட்கிறபோது கடலென திரண்டிருக்கும் கூட்டம் அலையாக எழுச்சி கொள்கிறது. தமிழ் இலக்கணம் கற்று தமிழின் சிகரம் தொட்டவர்கள்கூட இந்தப் பாட்டை படித்து பொருள்கூற முடியாத அளவிற்கு இந்தப் பாடலில் ஆழம் உள்ளது, அழகு உள்ளது. அதை தமிழுக்கு செய்து தந்தவர் அருணகிரி நாதர். 

 

சித்தர்கள் வரிசையில் வைத்து அருணகிரி நாதர் கொண்டாடப்படுகிறார். முருகனின் அருள்பெற்றவர்களில் முதன்மையானவராக இருக்கிறார். அருணகிரி நாதரின் திருப்புகழை ஆய்வு செய்து அதன் புகழை தமிழ்நாடு முழுவதும் பரப்புவோமானால் தமிழ் மீண்டும் தழைக்கும். இறைவனின் அருள் கைகூடினால் ஒன்றுக்கும் ஆகாதவன் என்று பேசப்பட்டவன்கூட பூவாக மலர்வான் என்பதற்கு அருணகிரி நாதர் உதாரணம். திருப்புகழை பாடப்பட வாய் மணக்கும் என்பார்கள். வாய் மட்டுமல்ல, சிந்தையும் செவியும்கூட மணக்கும். தீந்தமிழுக்கு கிடைத்த நன்கொடையான திருப்புகழை அனைவரும் படிப்போம்.

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.