
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று (01.06.2025) தொடங்கியுள்ளது. பொதுக்குழு மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் உள்ள அண்ணா, கலைஞர், அன்பழகன் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் மேடையில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர் மூர்த்தி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோரும் மேடையில் உள்ளனர்.
முன்னதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்து, போப், சீதாராம் யெச்சூரி, சங்கரய்யா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்!
கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதுமுதல் எதிர்கொண்ட 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2020 ஊரகஉள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்களங்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றிடும்வகையில் வியூகத்தை வழங்கி, அந்த வெற்றிக்கு ஓயாது உழைத்திட்டவரும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருபவருமான கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர்அவர்களுக்கு, பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகக் கூட்டணி முழுமையான வெற்றிபெற்று, கழகத் தலைவர் அவர்கள் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பேற்க நாம் அனைவரும் அயராது உழைப்போம் என இப்பொதுக்குழு உறுதியேற்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் பேருந்துகளில் மகளிர், மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் ஆகியோருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், 1.14 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர்உரிமைத் திட்டம், பெண்களுக்கு மானியத்துடன் இளஞ்சிவப்பு (பிங்க்) ஆட்டோ, புதுமைப் பெண் திட்டம், அரசுப் பணிகளில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டு, பணியாற்றும் பெண்களுக்கு தோழி விடுதி, வேலைக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகள் தங்கிட 17 சிப்காட் தொழிற்சாலை பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம், சுயஉதவிக்குழு சகோதரிகள் தயாரிக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல இலவசப் பயணத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற முன்னுரிமை, கோ-ஆப்டெக்ஸ் பொருட்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடி, மகளிருக்குஆவின் தயாரிப்புப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை, இ-சேவைமையங்களில் 10 விழுக்காடு சேவைக் கட்டணம், மற்றும் சமூகநீதித்திட்டங்கள் போன்ற எண்ணற்ற சமூக நலத்திட்டங்களைக் கொண்டு வந்துமகளிரின் வாழ்வை மேம்படுத்தி, இந்திய அளவிலான பெண்பணியாளர்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் 42% என்கிற சாதனையையும்படைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குஇப்பொதுக்குழு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.
கடந்த நான்காண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் மேட்டூர் அணையை திறந்து, உழவர்களின் நலனைப் பாதுகாத்திருக்கிறது திராவிட மாடல் அரசு. இந்த ஆண்டும், வருகின்ற ஜூன் 12-ஆம் நாள் மேட்டூர் அணையை த் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர்.

இதுவரையில் வேளாண்மைக்கெனத் தனியாக 5 நிதிநிலை அறிக்கைகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நெல் - கரும்பு - பருத்தி - எண்ணெய் வித்துகள் - பயறு வகைகள் உள்ளிட்ட அனைத்து வகை தானியங்களின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதுடன் வேளாண்மைக்கு ஆதாரமான நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தி, நவீன கருவிகள் வழங்கப்பட்டு, பணப் பயிர் வேளாண்மை, இயற்கை வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு என அனைத்தையும் மேம்படுத்தி சிறந்த உழவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உழவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து நலன் காக்கும் திராவிடமாடல் அரசு நெசவாளர்களின் வாழ்விலும் வெளிச்சம் பரவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் ஈரோடு, கரூர், விருதுநகர், மதுரை, தஞ்சாவூர் ஆகியபகுதிகளில் கைத்தறி - விசைத்தறி மேம்பாட்டிற்காகப் பல்வேறுதிட்டங்களைச் செயல்படுத்தியிருப்பதுடன், இளைய தலைமுறையினரைக்கைத்தறித் தொழிலில் தொழில் முனைவோராக்கும் வகையில் 10 சிறியகைத்தறிப் பூங்காக்கள் அமைத்திடவும், கோ-ஆப்டெக்ஸ் மூலமாகநெசவாளர்களின் திறன்களை மேம்படுத்தவும், விசைத்தறி உற்பத்தித்திறனை அதிகரிக்க மின்னணுப் பலகைகள் நிறுவ மானியம் வழங்கியும், நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தியும், பட்டு நெசவு உற்பத்திக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தியும்மனிதர்களின் மானம் காக்கும் நெசவாளர்கள் தங்கள் வாழ்வை சிறப்பாகஅமைத்துக் கொள்ளும் வகையில் பல சாதனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல், தமிழ்நாடு மீனவர் நலவாரியம் வாயிலாக 19,997 பயனாளிகளுக்கு பல்வேறு நிவாரணம் மற்றும் உதவித்தொகை திட்டங்களின் கீழ் ரூ.25.68 கோடியை வழங்கியதுடன், கடந்த நான்காண்டுகளில் 121 மீன்வள உட்கட்டமைப்புப் பணிகளுக்காக மொத்தம்ரூ.1,849 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவ மக்களுக்கான சிறப்பு மாநாட்டில் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு, 1,000 கோடிரூபாய்க்கும் அதிக மதிப்பிலான மீனவர் நலத்திட்டங்களை அறிவித்து அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். இப்படி, ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பார்த்து பார்த்து திட்டங்களைச் செயல்படுத்துகிறது முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பரப்புரை செய்வோம்!
சுமார் 200 இளம் பேச்சாளர்களை உருவாக்கி மாநிலம் முழுவதும் பொதுக்கூட்ட பரப்புரைகளில் பங்கேற்கச் செய்தும், தொகுதி தோறும் கலைஞர் நூலகங்கள் எனத் தற்போது வரை 100-க்கும் அதிகமான நூலகங்கள் இளைஞர் அணியால் உருவாக்கப்பட்டுள்ளன. முத்தமிழறிஞர் பதிப்பகம் ஏற்படுத்தி அதன் மூலம் 20-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியீடு; இளம்பேச்சாளர்கள் பயிற்சி முகாம்கள், தொகுதிதோறும் பாக முகவர்கள் பயிற்சிக் கூட்டங்கள் நடத்தி வருவது; இளைஞர் அறக்கட்டளை மூலம் மாதந்தோறும் நலிந்தோர் சுமார் 15 பேர்க்குக் குறையாமல் கல்வி, மருத்துவநிதி அளித்து உதவி வருவது, இளைஞர் அணி சார்பில் முரசொலி ஏட்டில் நாள் தோறும் ‘பாசறைப் பக்கம்’ எனும் தலைப்பில் ஒருபக்க அளவில் திராவிட இயக்க வரலாறுகளையும், கழக இலட்சியப் பயணத்தின் தியாக வரலாற்றையும் உயிரோட்டத்துடன் பதிவு செய்து வருவது போன்ற சிறப்பான பணிகளை இளைஞர் அணிச் செயலாளரான துணை முதலமைச்சர் செய்து வருகிறார். வலிமைமிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கி வரும் துணை முதலமைச்சர் - கழகத்தின் உதயநிதி ஸ்டாலினின் செம்மாந்த பணிக்குத் துணை நிற்போம் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக்கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்!
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிடுக!
கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்!
இரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்!
சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இஸ்லாமிய சொத்துக்களைச் சூறையாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!
ஒன்றிய விசாரணை அமைப்புகளைத் தவறாகப்பயன்படுத்தும் பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்!
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள்.
தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம்!
பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மத ரீதியாக பிளந்து, இந்துத்துவாக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்க புனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கான கைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம், மன்னார் வளைகுடா ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகள் அமைத்தல், தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு எனத் திட்டமிட்ட வஞ்சகங்களும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்துதல், அரசியல் எதிரிகள் மீது வெறுப்பு பரப்புரைப் பேச்சுகளை உமிழ்தல், பொய் வழக்குகள் பாய்ச்சுதல், அரசு எந்திரங்களைச் சட்ட மீறலாகப் பயன்படுத்தி மாநிலஅரசுகளுக்கு மிரட்டல் விடுத்தல், ஒன்றிய அரசின் இலஞ்ச - ஊழல்களைஆதாரத்துடன் எதிர்த்து எழுதும், பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதுபொய் வழக்குகள், சிறை போன்ற அநீதிகளுமே தொடர்வதால், இத்தகையசர்வாதிகாரப் போக்கை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிடுக!
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!
தமிழ்நாட்டின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது!
ஆளுநரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவருக்குப் பாராட்டு.
குடியரசுத் துணைத்தலைவருக்கு கண்டனம்.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பே பெரியது என்பதையும், நியமனப் பதவியான ஆளுநர் பதவிக்குச் சட்டமன்ற முடிவுகளை நிறுத்தி வைக்கும் அதிகாரமில்லை என்பதையும் வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காத்துள்ள இந்த மகத்தான தீர்ப்பு குறித்து, உள்நோக்கம் கொண்ட விமர்சனப் பார்வையுடன், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்பிற்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்த குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் அவர்களுக்கு இப்பொதுக்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல்உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக்கண்டனம்! - திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திடுக!
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என அழகியதமிழ்ப்பெயர்களைச் சூட்டுவோம்!
அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல்குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைத் தீர்ப்புக்குவரவேற்பு!
வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும்விரட்டியடித்து 2026-இல் கழக ஆட்சி தொடரகளப்பணியைத் தொடங்குவோம்!- திமுக பொதுக்குழுவில் தீர்மானம்
ஓரணியில் தமிழ்நாடு
முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் பண்பாட்டு மையமான மதுரையில் இன்று நடக்கும் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் "ஓரணியில் தமிழ்நாடு" எனும் பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்துள்ளார்.
நம் மண், மொழி மற்றும் தமிழ்நாட்டு மக்களின் சுயமரியாதையை காக்கும் போரில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஒன்றிணைக்கும் பொருட்டு இப்பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. "ஓரணியில் தமிழ்நாடு" என்பது, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கட்சி உறுப்பினராக பதிவு செய்வதற்கான முயற்சியாகவும் அமைந்துள்ளது. மாநிலத்தின் ஒவ்வொரு சாமானியரையும் இணைக்கும் முதல் மக்கள் பிரச்சார இயக்கம்.
நம் மண், மொழி, சுயமரியாதையை காக்க தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களிடமும் (2 கோடி குடும்பங்கள்) இப்பிரச்சாரத்தை கொண்டு சென்று அதில் குறைந்தபட்சம் 1 கோடி குடும்பங்களை ஒரே தமிழ்நாடு அணியில் (ஓரணி) இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது "ஓரணியில் தமிழ்நாடு" பிரச்சார இயக்கம்.
இப்பிரச்சாரம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு எனும் செயலியின் மூலம் செயல்படுத்தப்படும். இயக்கத்தை ஆதரிக்கும் ஒவ்வொருவரும் இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணை அழைத்து தங்கள் ஆதரவை தெரிவித்து இணைந்துகொள்ளலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கும் உறுப்பினராக இணைய இந்த செயலி வழிவகுக்கும். தமிழ்நாடு மற்றும் திராவிட மாடலின் பெருமையை வலியுறுத்தும் பிரச்சார இயக்கம்
ஒன்றிய அரசின் மாநில உரிமைகளை பறிக்கும் திட்டங்கள், மொழித் திணிப்பு ஆகிய சவால்களுக்கு எதிராக பண்பாடு மற்றும் அரசியல் தளத்தில் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான அழைப்பே இப்பிரச்சார இயக்கம். அரசியல் மற்றும் பண்பாட்டு அழுத்தங்களால் தமிழ்நாடு சூழப்படும்போதெல்லாம் "ஓரணியில் தமிழ்நாடு" ஒற்றுமை, சுயமரியாதை மற்றும் மாநிலத்தின் கூட்டாட்சி உரிமைகளை வலியுறுத்தும். மாநிலத்தின் உரிமைக் குரல்களை முடக்கவும் வலிமை இழக்கவும் ஒன்றியம் செய்யும் முயற்சிகளுக்கு இப்பிரச்சார இயக்கம் நேரடி பதிலாக அமைவதோடு மக்களாட்சியில் திமுகவின் உறுதியான பங்களிப்பையும் வெளிப்படுத்தும்.
இந்த பிரச்சார இயக்கத்தின் மூலமாக தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்கு சொல்லும் செய்தி ஒன்றுதான்.
“அடங்கிப்போக மாட்டோம். பிளவுபட மாட்டோம்.
ஒற்றுமையுடன் ஓரணியில் நிற்கும் தமிழ்நாடு!”
திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திட, தமிழ்நாட்டின் நலனையும் உரிமைகளையும் காத்திட “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30% வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.