
காவல் நிலையத்தில், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காவலர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் செட்டிபாளையத்தில் காவல் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ள ரமேஷ் என்பவர் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பாஸ்போர்ட் விபரங்களைச் சரிபார்ப்புக்கு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் ரமேஷ் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரமேஷை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் காவல் நிலையத்திலேயே காவலர் ஒருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் கோவை மக்கள் மத்தியும் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. புகார் அளிக்க வரும் புகார்தாரர்களிடம் தொடர்ந்து லஞ்சம் பெற்று வருவதாக ஏற்கனவே இவர் மீது புகார்கள் எழுந்ததாகவும் கூறப்படுகிறது.