Skip to main content

சென்னை சரிப்பட்டு வராது போலிருக்கே... ஐ.டி.ரெய்டு பிரச்சனை... மாஸ்டர் படத்தை வைத்து விஜய் போட்ட கணக்கு! 

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

மிரட்டிய ஐ.டி. ரெய்டை ஒரு வழியாக சமாளித்து, "மாஸ்டர்'’படத்தின் மொத்த ஷூட்டிங்கையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார் விஜய். ஷூட்டிங்கின் கடைசி நாளுக்கு முந்தைய நாள் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், ‘மாஸ்டரின் வில்லன் விஜய் சேதுபதி மற்றும் டெக்னீஷியன்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்து அசத்தினார் விஜய்.

விருந்தெல்லாம் அமர்க்களமாக முடிந்து "மாஸ்டர்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த ஆயத்த வேலைகளை ஆரம்பித்த போதுதான்... விஜய்க்கு அக்கப்போரும் ஆரம்பமானது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் விழாவை நடத்த அனுமதி கேட்டவுடனேயே நோ சொல்லிவிட்டது அரசு தரப்பு. அதன்பின் தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரி நிர்வாகத்தை தயாரிப்பாளர் தரப்பு அணுகியது. ஆனால் "பிகில்'’பட ஆடியோ விழாவுக்கு அனுமதி கொடுத்துவிட்டு, அதன் பின் அரசாங்கத்தால் வந்த நெருக்கடி கண்முன்னே நிழலாடியதால் சாய்ராம் கல்லூரியும் "சாரி சார்' என சொல்லி விட்டது.

 

vijay



"சென்னை சரிப்பட்டு வராது போலிருக்கே' என்ற யோசனையுடன் கோவை இந்துஸ்தான் கல்லூரிக்குப் போன போது சாய்ராம் கதை எங்களுக்கும் தெரியும் என்றது இந்துஸ்தான். ஆடியோ விழாவை நடத்துவதற்கு பலவகையிலும் மாஸ்டர் மல்லுக் கட்டுவதற்கு காரணம், விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர், தனியார் தொலைக் காட்சி ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டு பேசும்போது, ""ஐ.டி.ரெய்டு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு ‘மாஸ்டர்’ ஆடியோ விழாவில் விஜய் பதில் சொல்வார்'' என சொன்னதுதான்.

பார்த்தார் விஜய், எதுக்கு இந்தக் குடைச்சல், ஏன் இந்த அலைச்சல்... இருக்கவே இருக்கு சன் டி.வி. அவர்களிடமே பேசுவோம் என்ற முடிவுடன் கலாநிதிமாறனிடம் பேசியுள்ளார். மாஸ்டரை 27 கோடி ரூபாய்க்கு சன் டி.வி. வாங்கியிருப்பதால் கலாநிதிமாறனும் டபுள் ஓ.கே. சொல்லிவிட்டார். இதனால் சன் டி.வி. அருகிலேயே உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலான லீலா பேலஸில் 500 பேர் மட்டுமே அமரக்கூடிய ஹாலில் ஆடியோ விழாவை நடத்தி அதை நேரடி ஒளிபரப்பும் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடித்துள்ளார் விஜய்.
 

vijay



அவர் நடித்த மற்ற கம்பெனி படங்களின் ஆடியோ விழாக்களுக்கு பெரும் செலவு செய்தனர். அதில் விஜய் பேசுவது ஒரு தரப்பில் பட்டையைக் கிளப்ப, இன்னொரு பக்கம் பிரச்சினையைக் கிளப்பும். தயாரிப்புத் தரப்பு பதட்டமாகும். "மாஸ்டர்' படத்தை தனது சித்தப்பாவே தயாரித்திருப்பதால் சிக்கன செலவு, ரசிகர்களை ஒருங்கிணைப்பதில் ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்ப்பது என ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் விஜய், நேரடி ஒளிபரப்பு என்றால் போலீஸ் பெர்மிஷன் தேவையில்லை என்ற கணக்கும் போட்டுள்ளார்.

-ஜெ.தாவீதுராஜ்
 

 

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“எல்லா மலையாளிகளுக்கும்...” - விஜய் வெளியிட்ட செல்ஃபி வீடியோ வைரல்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
vijay kerala selfie video

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி முதல் கேரளாவில் நடைபெற்று வருகிறது. காவலன் படத்திற்குப் பிறகு 14 ஆண்டுகள் கழித்து கேரளாவிற்கு விஜய் செல்வதால், அவரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டன. படப்பிடிப்பிற்காக கடந்த 18 ஆம் தேதி விமானம் மூலம் விஜய் கேரளா சென்ற நிலையில் அவரைக் காண திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். பின்பு விஜய், தனது ரசிகர்களுக்கு கையசைத்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறிச் சென்றார். அவர் வெளியில் செல்லும்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் காரை சுற்றி வளைத்து நின்றதால், கூட்ட நெரிசலில் கார் சிக்கிக்கொண்டு நகர முடியாமல் தவித்தது. ரசிகர்களின் நெருக்கத்தால் கார் கண்ணாடி உடைந்துள்ளது. மேலும் காரின் பின்பகுதி, முன்பகுதி எனப் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனால், விஜய்யை காண மைதானத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனை அறிந்த விஜய், வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து அவர்களின் அன்பை பெற்று, அங்கிருந்த கேரவன் வாகனம் மீது ஏறி ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தினமும் அவர் ரசிகர்களை பார்க்கும் வீடியோவும், அவர் பேசும் வீடியோவும் சமுக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அந்த வகையில் ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”எல்லா மலையாளிகளுக்கும்” என குறிப்பிட்டு மலையாளத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.